மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் சில போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால், அவரிடம் இருந்து கேப்டன்சி பிடுங்கி பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நவ.10ல் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில சொந்த காரணங்களால், இந்திய அணியுடன் பயணிக்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரோஹித் சர்மாவும் ஏற்றுக் கொண்ட நிலையில், இந்திய அணி புதிய கேப்டனுடன் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் களமிறங்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.
அதேபோல் 2வது டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா வந்தாலும், அவரை சாதாரண வீரராக விளையாட வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ரோஹித் சர்மா எப்போது இந்திய அணியுடன் இணைவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் கேப்டனாக விளையாடக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
அதனால் துணைக் கேப்டனாக உடனடியாக கேப்டனாக அறிவிக்க வேண்டும். ஒரு கேப்டன் முதல் போட்டியில் விளையாடவில்லை என்றால், அது மிகப்பெரிய தவறு. அதனால் சுனில் கவாஸ்கர் சொல்வதில் எந்த தவறும் கிடையாது. கடந்த முறை விராட் கோலி ஒரு போட்டியில் விளையாடிவிட்டு, அடுத்த 3 போட்டிகளில் விளையாடவில்லை. அதனை முன்கூட்டியே அனைவருக்கும் கூறியதால், ரஹானே பொறுப்புக்கு வருவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
இதனால் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டான போதும், 2வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய கம்பேக்கை இந்திய அணி நிகழ்த்தியது. கேப்டன் இல்லாமல் இந்திய அணி விளையாடுவது முதல்முறையல்ல. விராட் கோலி முன்கூட்டிய ரஹானேவை தயார் செய்தார். ஆனால் ரோஹித் சர்மா தரப்பில் பும்ராவிடம் பொறுப்பை கொடுக்க தயக்கம் காட்டுகிறார். அதேபோல் தேர்வுக் குழுவும் ரோஹித் சர்மா விவகாரத்தில் என்ன செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை அவரால் முதல் போட்டியில் விளையாட முடிந்தால், சிக்கல் இருக்காது என்பதால் முடிவு எடுக்காமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.