சிட்னி : இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. பார்டர் கவாஸ்கர் தொடரை கடைசியாக ஆஸ்திரேலிய அணி, 2014 ஆம் ஆண்டு வென்றது.
அதன் பிறகு முழுக்க முழுக்க இந்தியாவை இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தியது. அது மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு கடைசியாக இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் அடித்து இருந்தால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் வழக்கம் போல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.
குறிப்பாக விராட் கோலி 6 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரிஷப் பண்ட் மட்டும் 33 பந்தில் 61 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இந்திய அணி 157 ரன்களில் சுருண்டது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கோன்ஸ்டாஸ் 22 ரன்களும், உஸ்மான் கவாஜா 41 ரன்களும் எடுத்து பலமான நிலைக்கு கொண்டு சென்றனர்.
இறுதியில் டிராவிஸ் ஹெட் 34 ரன்களும், வெப்ஸ்டர் 39 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலிய அணி 27 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் பத்தாயிரம் ரன்களை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 58 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்த போது இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் வழக்கம் போல் டிராவிஸ் ஹெட் இந்தியாவின் கதையை முடித்து விட்டார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் பும்ரா பந்துவீச வரவில்லை. பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலியா மூன்றுக்கும் ஒன்று என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் தொடரை 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி இருக்கிறது.இதனால் ஹாட்ரிக் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிக்கொடி நாட்டும் இந்தியாவின் கனவு பழிக்கவில்லை.