மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசஸ் தொடர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதை போல் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை படைத்த நிலையில் தற்போது ஹட்ரிக் சாதனையை நிகழ்த்த இந்தியா ஆயத்தமாகி வருகிறது. அதேசமயம் தொடர்ந்து இரண்டு முறை தோற்று இருப்பதால் தற்போது பலவீனமாக இருக்கும் இந்திய அணியை ஓயிட் வாஷ் செய்ய ஆஸ்திரேலியாவும் தீவிரமாக எதிர்நோக்கி இருக்கிறது.

ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இந்தியாவை மட்டம் தட்டி பேசி வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் பிஞ்ச் மட்டும் இந்தியாவை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது என்பது போல் பேசியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆஸ்திரேலியா மட்டுமல்ல இந்தியாவிலும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக இரண்டு அணிகளின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க வாய்ப்பு இருக்கின்றது. எனவே இந்தியா, ஆஸ்திரேலியா என இரண்டு அணியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக விக்கெட் கீப்பர்கள் மாறி இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி, ரிஷப் பண்ட் ஆகியோர் அபாரமாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
ஏனென்றால் இரண்டு அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து விட்டால் ஆறு அல்லது ஏழாவது இடத்தில் களமிறங்கும் அலெக்ஸ் கேரி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தான் தங்களது அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டும். இருவருமே தங்களது அணிக்காக அதிரடியாக விளையாடக் கூடியவர்கள்.
இதனால் பெரும்பான்மையான போட்டிகள் ஒருதலை பட்சமாக முடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த இரண்டு வீரர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக இரண்டாவது புதிய பந்தை வைத்து பவுலர்கள், 50 ரன்களுக்கு எஞ்சி இருக்கும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அப்படி நடந்தால் போட்டியில் முடிவே மாறிவிடும்.
எனவே ஏழாவது பேட்ஸ்மேன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருப்பார். இரண்டு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் சரி சம பலத்துடன் இருப்பார்கள். அஸ்வின்,ஜடேஜா, நாதன் லயனை ஒப்பிட்டால் நாதன் லயன் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடியது அவருக்கு சாதகமாக அமையும். இரண்டு அணி பேட்ஸ்மேன்களுமே தற்போது பெரிய அளவில் பார்மில் இல்லை. இதனால் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் மிகவும் முக்கியம் என்று நான் கூறுகிறேன் என்று பிஞ்ச் கூறியுள்ளார்.