மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும்.
இந்த நிலையில் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு இந்திய அணி மோசமாக செயல்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக சொந்த மண்ணில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகி தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பிருடன் விராட் கோலி மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராண்டன் ஜூனியர் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக பிராண்டன் ஜூனியன், 7 டெஸ்ட் போட்டி மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை நான்கு நாட்களுக்குள் ஆஸ்திரேலியா முடித்து விடும். இந்திய அணியில் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றது. ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே முதல் போட்டியில் பும்ரா தான் கேப்டனாக இருக்கப் போகிறார்.
இது பும்ராவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். பும்ரா ஒரு சிறந்த பவுலர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் திடீரென்று நீங்கள் தான் அணியின் கேப்டன் என்று சொல்லி பெரிய பொறுப்பு கொடுத்தால், அது நிச்சயம் அழுத்தத்தை கொடுக்கும். குறிப்பாக விராட் கோலி தற்போது சிறந்த பார்மில் இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் ஆட்டம் இழந்த முறையை பார்க்கும் போது நம்பவே முடியவில்லை.
கேப்டன் மற்றும் பயிற்சியாளர் உடன் விராட் கோலி ஒற்றுப் போகவில்லையோ என தோன்றுகிறது. எனினும் விராட் கோலி தனியாலாக நிலைமையை மாற்றக்கூடிய வீரராக இருக்கின்றார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் அவர் பார்முக்கு திரும்ப வில்லை என்றால் அங்கேயே தொடர் முடிந்து விடும். சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக விராட் கோலி தடுமாறுவதை பார்க்கும்போது வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் விளையாட அவர் விரும்புவார் என்று நினைக்கின்றேன்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் நாதன் லயான் இருக்கின்றார். அவரும் அற்புதமாக பந்து வீசக்கூடியவர். எனவே விராட் கோலிக்கு இங்கும் சிக்கல் இருக்கின்றது. ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை ஹேசல்வுட்டுக்கு இந்த தொடர் மிகச் சிறப்பானதாக இருக்கும். அவரை சந்திக்கும் எந்த பேட்ஸ்மேன்களுக்கும் சுலபமாக இருக்காது என்று பிராண்டன் ஜூலியன் தெரிவித்துள்ளார்.