மும்பை : 2024 ஆம் ஆண்டில் மிக முக்கிய தொடராக பார்க்கப்படுவது இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் தான். இந்த தொடர் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
எஞ்சி இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். ஒருவேளை இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வெற்றி பெற்றால்,மற்ற அணிகளின் தயவு தேவைப்படும்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் பும்ராவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த சூழலை சமாளிக்க ஆஸ்திரேலியா அணி சிறப்பான ஒரு திட்டத்தை தீட்டி இருப்பதாக நியூஸிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் தூல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியா ஆஸ்திரேலியா தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புத்திசாலித்தனமாக தயாரித்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் பேட்ஸ்மேன்கள் நல்ல முறையில் விளையாட வேண்டும் என்பதை ஆஸ்திரேலியா புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய அபாயத்தை கொடுக்கப் போவது பும்ரா தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இதனால் கடினமான ஆடுகளத்தையும் பின், பிங்க் பால் டெஸ்ட் போட்டியையும் முதலில் நடத்துகிறார்கள். இதன் மூலம் பும்ராவை வறுத்தெடுக்கும் முடிவில் ஆஸ்திரேலியா இருக்கிறது.
பெர்த் நகரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. பெர்த்தில் உள்ள வெப்பம் நிச்சயம் பும்ராவை சோர்வடைய வைக்கும். பெர்த் டெஸ்ட் போட்டியில் பும்ரா அதிக ஓவர்கள் வீசும் நிலை வரலாம். இதனை தொடர்ந்து பிங்க் பால் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறுகிறது. இதிலும் பும்ரா அதிக ஓவர்கள் வீச வேண்டும். அதன்பிறகு பிரிஸ்பேனில் போட்டியை நடத்துகிறார்கள். அங்கு வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட முடியும்.
இந்த சூழலில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பும்ராவை சோர்வடைய செய்து, அதன் பிறகு அவரை எளிதாக எதிர்கொள்ளும் ஒரு திட்டத்தை ஆஸ்திரேலியா தீட்டி இருக்கிறது என சைமன் தூல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.