மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணம் எப்போதுமே இந்திய அணிக்கு ஒரு தலைவலியை கொடுக்கும். ஏனென்றால் ஆஸ்திரேலிய நாட்டு ஊடகங்களை சமாளிப்பது மிகப்பெரிய டென்ஷனை அணி நிர்வாகத்திற்கு கொடுக்கும்.
வீரர்களை கவனச் சிதறல்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் நாட்டு ஊடகங்கள் செய்யும். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் அணியில் இருக்கும் தற்போதைய வீரர்கள் வேண்டுமென்றே எதிர் அணியை வம்பு இழுத்து பேசி மைண்ட் கேமில் ஈடுபடுவார்கள்.

மேலும் ஒரு அணி பயிற்சி செய்கிறது என்றால், அங்கு பத்திரிகையாளர்கள் கூடி நின்று வேவு பார்ப்பார்கள். இதையெல்லாம் சமாளிக்கும் விதமாக கௌதம் கம்பீர் ஒரு முடிவை எடுத்தார். அதாவது இந்திய அணி பயிற்சி செய்வதை வெளி ஆட்கள் யாரும் பார்க்க கூடாது என்பதற்காக திரையை வைத்து இந்திய அணி பயிற்சி செய்யும் இடத்தை மூடிவிட்டார். ஆஸ்திரேலிய அணி எதிர்ப்பாராததை கம்பீர் தற்போது செய்துவிட்டார்.
இதனால் தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் பல விதமான விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். இதில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் இயன் ஹேலி, வெளியிட்டுள்ள கருத்தில் ஒரு காலத்தில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு சென்று ஆஸ்திரேலியா என்ன செய்யுமோ அதை ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது இந்தியா செய்கிறது.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் கள சூழல் மற்றும் ஊடகங்களை எதிர்கொள்ள இருந்த வாய்ப்பை தற்போது இந்தியா தடுத்து விட்டது. ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள் பெரும்பாலும் இந்திய அணியை விரும்பக் கூடியவர்கள். அவர்களிடமிருந்து நீங்கள் ஏன் மறைந்துக் கொள்கிறீர்கள்.
உங்களால் எவ்வளவு நாள் தான் இப்படி மூடி மறைக்க முடியும். இந்த தொடர் நீண்ட நெடியது. இந்தத் தொடர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் திரையை விலக்கிக் கொள்ளுங்கள். இந்தியா இவ்வாறு முடிவு எடுத்ததற்கு பின்னால் பல காரணம் இருக்கலாம். வீரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது குறித்து ரகசியம் காக்க இந்திய அணி இந்த முடிவை எடுத்திருக்கும். ஆனால் இது எப்போதும் எந்த அணிக்கும் கை கொடுத்தது கிடையாது.
நீங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் ரிலாக்ஸாக இருக்க முடியாது. நீங்கள் இவ்வாறு உங்களை மறைத்துக் கொள்வதன் மூலம் ஊடகங்கள் மேலும் உங்கள் மீது கடும் கேள்விகளை முன் வைக்கும். இதே போல் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது செய்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் சரியாக விளையாடவில்லை. இந்த முறையை கைவிட்ட பின்பு அவர்களுடைய செயல்பாடுகளில் முன்னேற்றம் இருந்தது. எனவே இந்தியா கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் என் அளித்த தெரிவித்துள்ளார்.