சிட்னி : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக பும்ரா முழு நேரம் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பும்ரா போன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளர் முழுநேர கேப்டனாக செயல்படுவது என்பது ஒரு அணிக்கு நல்லது கிடையாது.
அதற்கு என்ன காரணம் என்பது சிட்னி டெஸ்ட் போட்டியில் தெரிந்து விட்டது. பும்ரா போன்ற வேகப் பந்துவீச்சாளர் நம்பி தான் இந்திய அணி இருக்கிறது. இதனால் பும்ரா, டெஸ்ட்ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாடி வருகிறார்.

இதில் டெஸ்ட் போட்டிகளில் பும்ரா அதிக ஓவர்கள் வீசுகிறார். இதன் காரணமாக பும்ராவுக்கு உடல் சோர்வு நிச்சயம் ஏற்படும். எந்த ஒரு மனிதனாலும் தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓவர் வீச முடியாது. பணிச்சுமை ஏற்பட்டு உடல் பாதிப்பு ஏற்படும். இதுதான் தற்போது பும்ராவுக்கு நடைபெற்று இருக்கிறது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இதுவரை 10 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். சிட்னியில் தற்போது கடும் வெப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பும்ரா தொடர்ந்து பந்து வீச முடியாத நிலையில் இருந்தார். இதனை அடுத்து மதிய உணவு நேரத்திற்கு முன்பே பும்ரா டிரெஸ்ஸிங் ரூம்க்கு சென்று ஓய்வு எடுக்க சென்று விட்டார்.தற்போது, அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் பரிசோதனைக்கு சென்று இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக விராட் கோலி தான் கேப்டன் பதவியை பார்த்துக்கொண்டார். விராட் கோலி வழக்கம் போல் தன்னுடைய யுக்திகளால் பௌலர்களை மாற்றி மாற்றி ஆஸ்திரேலிய வீரர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார்.ஒரு ஓவர் ஜடேஜாவுக்கு வழங்கிய விராட் கோலி ,அதன் பிறகு மீண்டும் சிராஜ் பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கு வழங்கினார். இதன் காரணமாக மதிய உணவு நேர இடைவெளிக்கு முன்பு பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரின் ஸ்மித் ஆட்டம் இழந்தார்.
இது போட்டியில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஸ்மித் அபாரமாக விளையாடி வந்து இந்தியாவுக்கு ஆபத்தாக விளங்கி இருந்தார். இதனால்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக விராட் கோலியே செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பும்ரா ஏதாவது ஒரு போட்டியில் கேப்டனாக இருக்க வாய்ப்பு தரலாம்.
ஆனால் தொடர்ந்து முழு தொடரிலும் பும்ரா கேப்டனாக இருந்தால் அவருக்கு உடல் அளவில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர் போட்டியிலிருந்து விலக நேரிடலாம். இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலியே கேப்டனாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.