பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் ஒரு குழு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் மற்றொரு குழு பயிற்சியாளர் கம்பீர் தலைமையில் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறது. இதற்கு முன்பு மும்பையில் செய்தியாளர்களுடன் பேசிய கௌதம் கம்பீர் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்த சூழலில் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை என்று கூறினார். இதனால் ரோகித் சர்மாவுக்கு பதில் தொடக்க வீரராக யார் களமிறங்க போகிறார் என்று கேள்விக்கு பதில் அளித்த கம்பீர், இந்திய அணியில் தொடக்க வீரர் இடத்திற்கு பல வீரர்கள் அணியிலே இருக்கிறார்கள். குறிப்பாக அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே எல் ராகுல் இருக்கிறார்கள்.
முதல் டெஸ்ட் போட்டியின் ரோஹித் விளையாடவில்லை என்றால் இந்த இரண்டு வீரர்களில் ஏதேனும் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்க கூடும். குறிப்பாக கேஎல் ராகுல் அனுபவமும் தகுதியும் வாய்ந்த வீரராக இருக்கின்றார். அவரால் டாப் ஆர்டர் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய முடியும். பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராகவும் இருந்தாலும் சரி நடு வரிசையில் ஆறாவது வீரராக இருந்தாலும் சரி ராகுல் பேட்டிங் செய்வார்.
இது போன்ற திறமை வாய்ந்த வீரர் எங்கள் அணியின் இருக்கிறார்கள். ராகுல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக கூட செயல்பட்டு இருக்கிறார். ராகுல் போல் இப்படி எந்த நாட்டில் வீரர்கள் இருக்கிறார்கள். எனக்கு தேவைப்பட்டால் ராகுல் நிச்சயம் அந்த பணியை செய்யக்கூடிய வீரராக இருக்கின்றார் என்று கம்பீர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய ஏ அணியில் அபிமன்யு ஈஸ்வரன் 7,12,0,17 ஆகிய ரன்கள் தான் தொடக்க வீரராக களம் இறங்கி அடித்தார்.அதேபோல் ராகுல் 4,10 ஆகிய ரன்கள் தான் இரண்டு இன்னிங்ஸிலும் அடித்து இருந்தார். இரண்டு வீரர்களுமே பயிற்சி ஆட்டத்தில் சரியாக செயல்படவில்லை. இதனால் ராகுல் தொடக்க வீரராகவும் சப்ராஸ்கான் அல்லது துருவ் ஜூரல் நடுவரிசை வீரராகவும் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது.