மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு மட்டுமல்லாமல் கம்பீருக்கும் வாழ்வா சாவா என்ற மானப் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. டிராவிட்டுக்கு பிறகு பயிற்சியாளராக கம்பீர் வரப் போகிறார் என்றவுடனே பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்திய கிரிக்கெட்டை உச்சத்திற்கு கொண்டு போகப் போகிறார் என்று பலரும் கம்பீரை பாராட்டினார்கள். ஆனால் கம்பீர வந்தவுடன் அனைத்தும் தலைகீழாக மாறியது. இந்திய அணி தோற்காத இடத்தில் எல்லாம் தோல்வியை தழுவியது. குறிப்பாக சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது.

இந்த சூழலில் கம்பீரின் இந்த மோசமான செயல்பாடுகள் பிசிசிஐ-யை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று கடினமான டாஸ்கை பிசிசிஐ கம்பீருக்கு வழங்கி இருக்கிறது. இதனால் எப்படியாவது இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கம்பீர் தீவிரமாக உழைத்து வருகிறார்.
இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் பந்து எப்போதுமே வேகமாக பேட்டிற்கு வரும். மற்ற நாட்டு ஆடுகளங்களை விட ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் ஆஸ்திரேலிய வீரர்களின் வேக பந்துவீச்சை எதிர்கொள்ள முதலில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா பிட்சின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள பயிற்சியாளர் கம்பீர் உலகின் அதிவேகமான மைதானம் என்று பெயர் பெற்ற வாக்கா (WACA) மைதானத்தில் இந்திய அணிக்கு பயிற்சி தர முடிவெடுத்திருக்கிறார்.
பெர்த் நகரில் உள்ள வாக்கா மைதானம் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் கைவிடப்பட்டு இருக்கிறது. தற்போது புதிய மைதானம் அமைக்கப்பட்டு அங்கே தான் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாலில் உள்ள பெர்த் மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் பயிற்சி எடுத்து விளையாடிவிட்டால், அவரால் எந்த மைதானத்திலும் ரன்கள் குவிக்க முடியும். இதனால் கைவிடப்பட்ட பழைய பெர்த் மைதானத்தில் தற்போது இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கி இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் தாங்கள் எவ்வாறு பயிற்சி மேற்கொள்கிறோம் என்பதை ஆஸ்திரேலிய ஊடகங்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக பயிற்சி செய்யும் இடத்தை ஸ்கிரீன் போட்டு துணியால் இந்திய அணி நிர்வாகம் மூடி இருக்கிறது. இதன் மூலம் எந்தவிதமான பயிற்சியை மேற்கொள்கிறோம் என்பதை வெளி உலகத்திற்கு தெரியாமல் இந்திய அணி நிர்வாகம் ரகசியத்தை காக்கிறது.
இதன் மூலம் வெளி உலகத்துக்கு தெரியாத பிரத்தேக பயிற்சியை இந்தியா எடுப்பதால் தான் இவ்வாறு மூடப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் இன்னும் 12 நாட்கள் இந்தியாவுக்கு பயிற்சி செய்ய நேரம் இருக்கின்றது.