மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து தொடர்களையும் அடுத்தடுத்து வெல்லும் ஆஸ்திரேலியாவால் கடந்த 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்ல முடியவில்லை. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியை தொடர்ந்து இரண்டு முறை இந்திய அணி வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்த வேண்டிய உத்வேகத்தில் இந்திய வீரர்கள் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணி எப்போதெல்லாம் பெரிய அணியை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் மற்ற அணி வீரர்களை வம்பிழுக்கும் வகையில் பேசுவார்கள்.

அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணி வீரர்களை வம்பிழுக்கும் வகையில் பேசி இருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிராட் ஹாடின், ஆஸ்திரேலிய வீரர்களின் வேகப்பந்துவீச்சை இந்திய அணி வீரர்களால் எதிர்கொள்ள முடியாது.
ஜெய்ஸ்வால் ஒரு நல்ல வீரர் தான். ஆனால் அவர் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்றது கிடையாது. இதனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இருக்கும் பவுன்சை அவரால் சரியாக கையாள முடியுமா என்றும் தெரியவில்லை. குறிப்பாக பெர்த் போன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தொடக்க வீரராக களமிறங்குவது மிகவும் கடினம்.
இதற்காக ஜெய்ஸ்வால் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பிராட் ஹாடின் கூறியுள்ளார். கடந்த முறை இந்திய அணியில் புஜாரா, ரகானே ஹனுமா விகாரி போன்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று பிறந்து வளர்ந்த வீரர்கள் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்கள். தற்போது கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடப் போகிறார்கள்.
கில்லுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. எனினும் விராட் கோலி போன்று பெயரை பெற வேண்டுமென்றால் அவர் தன்னுடைய திறமையை காண்பித்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். இதனால் கில்லுக்கு இது மிகப்பெரிய பரிட்சையாக பார்க்கப்படுகிறது.