மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள் பங்கேற்பதற்காக இந்திய அணி பெர்த் நகருக்கு சென்றிருக்கிறது. ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் ஆடுகளத்தில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும்.
பந்து வேகமாக பேட்டிற்கு வரும். இந்த பவுன்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள். இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று விளையாடுவது என்பது மிகவும் முக்கிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து போன்ற அணிகள் எல்லாம் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு அல்லது மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடும். ஆனால் இந்த பயிற்சி ஆட்டங்கள் வீணான வேலை என்று இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்தது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி எல்லாம் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்கு பதில் தனியாக பயிற்சி செய்ய விரும்பினார்கள்.
மேலும் மோசமான ஆடுகளம், திறமை குன்றிய வீரர்களை தொடரை நடத்தும் ஆஸ்திரேலிய வாரியம் அனுப்பி நேரத்தை வீண் செய்வதாக இந்தியா நினைக்கிறது. இதனால் தான் இம்முறை இந்திய ஏ அணியை ஆஸ்திரேலியாவுக்கு முன்பே அனுப்பி வைத்த பிசிசிஐ இந்திய சீனியர் அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோத ஏற்பாடு செய்தது.
ஆனால் திடீரென்று ரோகித் சர்மாவும் கம்பீரும் பயிற்சி ஆட்டம் வேண்டாம். வலை பயிற்சி செய்தாலே போதும் என்ற முடிவை எடுத்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தருணத்தில் தான் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியை தழுவியது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய போன்ற ஆடுகளத்தின் விளையாட பயிற்சி ஆட்டம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்துள்ள கம்பீர், பிசிசிஐயிடம் 3 நாள் பயிற்சி ஆட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இதன் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட பயிற்சி ஆட்டம் தற்போது மீண்டும் நடைபெற இருக்கிறது. இந்திய ஏ அணியுடன் இணைந்து பெர்த்தில் வரும் வெள்ளிக்கிழமை மூன்று நாள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் சீனியர் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதின் மூலம் ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது? பேட்டிங்கில் நாம் என்ன தவறு செய்கின்றோம். எப்படி விளையாட வேண்டும் என்ற ஒரு ஐடியா பேட்ஸ்மேன்களுக்கு கிடைக்கும் என்பதால் கம்பீர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடப் போகிறது என்ற அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.