சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இந்த போட்டியில் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததை தவிர மற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.
கோலி, இந்த தொடரில் மொத்தமாகவே 190 ரன்கள் அளவு தான் அடித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் கோலி, ஆப் சைடில் செல்லும் பந்தை அடித்து ஒரே மாதிரி அனைத்து இன்னிங்ஸ்களிலும் ஆட்டம் இழந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்பான் பதான், கோலியை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவருடைய தரத்தை நான் கேள்வியும் கேட்கவில்லை. கோலி இந்திய அணிக்காக பல ரன்களை குவித்து இருக்கிறார். இந்த சூழலில் அவர் ஒரே மாதிரி ஆட்டம் இழந்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது.
ஒரே தவறை எவ்வளவு முறை தான் செய்ய முடியும். கோலி இந்த தவறை தான் செய்கிறார் என்று கவாஸ்கர் சுட்டிக் காட்டிய பின்பும் அவர் கவாஸ்கரிடம் வந்து பேட்டிங் குறை பற்றி பேசி அறிவுரை கேட்டிருக்கலாம் அல்லவா? கவாஸ்கர் மைதானத்தில் தானே இருக்கிறார். இந்திய வீரர்கள் யாரும் அப்படி பேசவில்லை.
இருக்கும் குறையை தவிர்க்க கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் இந்திய வீரர்கள் செய்தது போல் தெரியவில்லை என இர்பான் பதான் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து பேசிய கவாஸ்கர், ரஞ்சிக் கோப்பை போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது. இதில் எத்தனை இந்திய வீரர்கள் பங்கேற்பார்கள் என தெரியவில்லை.
ஆனால் யாருக்கும் எந்தவித எக்ஸ்கியூஸும் கொடுக்கக் கூடாது. உங்களால் ரஞ்சிப் போட்டி வந்து விளையாட முடியவில்லை என்றால் அவர்களுக்கான வாய்ப்பை இழுத்து மூட வேண்டும். அந்த நபர்கள் இனி டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யக்கூடாது என்று கவாஸ்கர் கூறியிருக்கிறார்.