மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை தலைகீழாக மாற்றி இருக்கிறார். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் நிதிஷ்குமாரின் அபார சதத்தால் 369 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 105 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருகின்றனர். முதல் இன்னிங்சில் அதிரடி காட்டிய கோன்ஸ்டாஸ் எட்டு ரன்களிலும், உஸ்மான் கவாஜா 21 ரன்களிலும் ஆட்டம் இழக்க முகமது சிராஜ் பந்தில் ஸ்மித் 13 ரன்கள் வெளியேறினார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் களத்திற்கு வந்தார். நடப்பு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ள டிராவிஸ் ஹெட், ஆட்டத்தை தலைகீழாக மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பும்ரா தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்தார். தாம் ஏன் உலகில் முன்னணி வீரர் என்பதை பும்ரா இன்று ரசிகர்களுக்கு மீண்டும் காட்டினார்.
ஆட்டத்தின் 34 வது ஓவரில் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களத்திற்கு வந்த மிட்செல் மார்ஷ் அதேபோல் பும்ரா பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐந்து ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இதேபோன்று அடுத்த ஓவரில் அலெக்ஸ் கேரி இரண்டு ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஸ்டெம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஆறு விக்கெட் எடுத்து இருக்கிறது. கடைசி இன்னிங்ஸில் இந்திய அணி 250 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தால், ரோகித் சர்மா படை நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. அதை நோக்கி தான் இந்திய அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.