சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா காயம் காரணமாக பாதியில் வெளியேறி இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இந்த சூழலில் மருத்துவமனை ஸ்கேனில் பும்ராவுக்கு பெரிய அளவு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இது வெறும் தசை பிடிப்பு தான் என்றும் உறுதியாகி இருக்கிறது. எனினும் பும்ராவுக்கு முதுகில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், அவரை பந்து வீச அனுமதிக்க வேண்டாம் என மருத்துவக்குழு அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது.

எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா பந்து வீசுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. தற்போது இந்திய அணி 145 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், கைவசம் நான்கு விக்கெட் கொண்டு இருக்கிறது. இதனால், இந்திய அணி 180 முதல் 200 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு கடைசி இன்னிங்ஸில் கொடுத்தால் பும்ராவின் பந்துவீச்சு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடும்.
ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் பும்ராவை வைத்து விஷ பரிட்சையில் ஈடுபட பிசிசிஐ விரும்பவில்லை. ஆனால் இதற்கு கொஞ்சமும் ஒப்புக்கொள்ளாத பும்ரா தமக்கு வழி நிவாரண மாத்திரைகள் அல்லது வலி நிவாரண ஊசிகள் வழங்க மருத்துவக் குழுவை கேட்டு இருக்கிறார்.
தமது பந்துவீச்சு என்பது மிகவும் முக்கியம் என்றும் தொடர் தற்போது முக்கியமான கட்டத்தில் இருப்பதால் தமது உடல்நலம் குறித்து கவலை இல்லை என்று பும்ரா கூறி இருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் விட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வது மிகவும் முக்கியம் என்றும் இதனால் வெறும் நான்கு ஓவர்கள் ஸ்பெல்லாக வீசி விளையாட தான் தயார் என்றும் கூறியிருக்கிறார்.
பும்ராவின் இந்த உறுதி மற்ற இந்திய அணி வீரர்களையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. எனினும் இந்த ஒரு போட்டிக்காக பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கும் செயலில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதில் பிசிசிஐ தெளிவாக இருக்கிறது. இதனால் போட்டிக்கு முன்பு நாளை பும்ரா எவ்வாறு குணமாகி இருக்கிறார் என்பதை வைத்து தான் அவர் பந்து வீசுவாரா இல்லையா என்பது தெரியவரும்.