சிட்னி : பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய தவறு ஒன்றை செய்து விட்டதாக அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு பரிசு கோப்பை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆலன்பார்டர் வழங்கினார். இது கவாஸ்கருக்கு அவமரியாதையாக பார்க்கப்பட்டது.

ஏனென்றால் பார்டர் கவாஸ்கர் என்ற இருவரின் பெயரில் தான் கோப்பை வழங்கப்படுகிறது. இதனால் தான் மைதானத்தில் இருந்தும் என்னை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று கவாஸ்கர் குறை கூறியிருந்தார். கவாஸ்கரின் இந்த கருத்துக்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தவறு செய்து விட்டதாக கிளார்க் சுட்டிக்காட்டி உள்ளார். இது குறித்து பேசிய அவர், பல பேருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதை முன்கூட்டியே திட்டமிட்டார்கள் என்பது தெரியாது. இந்தியா வெற்றி பெற்றால் கவாஸ்கரும், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் ஆலன்பார்டரும் கோப்பையை தனியாக வழங்குவது தான் திட்டம். இது இந்த இருவருக்குமே ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைத்தேன்.
ஆனால் என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்த இந்த முடிவு முட்டாள்தனமானது. இரண்டு பேருமே அங்கு இருக்கும் போது எந்த அணி வென்றார்கள் என்பதை பார்க்காமல் இருவருமே அழைத்து இந்த கோப்பையை வழங்கி இருக்க வேண்டும். இருவரும் பரிசளிக்கும் மேடையில் இருந்திருக்க வேண்டும் என்று கிளாக் கூறியிருந்தார்.
எனினும் இந்த விஷயத்தில் கவாஸ்கர் இறுதியில் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.எனது நண்பர் ஆலன்பார்டருடன் இணைந்து பரிசு வழங்கியிருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் பரவாயில்லை என்று அவர் கருத்தை கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.