சிட்னி : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சிட்னி டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளில் இளஞ்சிவப்பு நிறம் கலந்த டெஸ்ட் ஜெஸ்ஸியை அணிந்து விளையாடினார்கள். பிங்க் நிற டெஸ்ட் போட்டி ஏற்கனவே அடிலெய்டில் நடந்து முடிந்த நிலையில் தற்போது சிவப்பு பந்தில் விளையாடப்படும் இந்த டெஸ்ட் போட்டிக்கு ஏன் வீரர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் விளையாட வந்தார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
முதல் இரண்டு நாட்கள் சாதாரண ஜெர்சியை அணிந்து வந்த இரு அணிகளும் தற்போது ஜெர்சியை மாற்றுவதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் கிளாண் மெக்ராத் நடத்தும் அறக்கட்டளையே இந்த மாற்றத்திற்கு காரணமாகும்.

மெக்ராத்தின் இரண்டாவது மனைவியான ஜென் மெக்ராத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோய் காரணமாக காலமானார். மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு அப்போது பெரிய அளவில் இருந்தது கிடையாது. இதனால் மார்பக புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளை நிறத்தில் கலந்த இளஞ்சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள்.
அப்போது ரசிகர்களும் இளஞ்சிவப்பு ஆடையை அணிந்து வர அறிவுறுத்தப்படுவார்கள். சிட்னி மைதானம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட பதாகைகள் மற்றும் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட்டிருக்கும். அத்துடன் நிற்காமல் இந்த டெஸ்ட் போட்டியில் பார்க்க வரும் ரசிகர்கள், மெக்ராத் நடத்தும் அறக்கட்டளைக்கு பணத்தை அள்ளிக் கொடுப்பார்கள்.
இந்த நிதி மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்தப்படும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், மற்றும் மெக்ராத் அறக்கட்டளை இணைந்து இந்த ஏற்பாடுகளை ஆண்டுதோறும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மனைவியின் பிரிவால் வாடும் மெத்ராஜ் இனி வேறு யாரும் இப்படி பாதிக்க கூடாது என்பதற்காக இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறார் இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.