சென்னை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் மற்றும் கேப்டன்சி பற்றி நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்தது. தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்ற இந்திய அணி, கடைசி ஒரு போட்டியில் மட்டும் தோல்வியடைந்து உலகக்கோப்பையை பறிகொடுத்ததால் ரசிகர்கள் சோகமடைந்தனர். இந்த உலகக்கோப்பை தொடரில் தமிழக வீரர் அஸ்வின் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடினார்.

அதன்பின் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்துள்ள பேட்டியில், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பின் ஓய்வறையில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பலரும் கண்ணீர்விட்டார்கள்.
அது எனக்கு கடினமாக அமைந்தது. பெரும்பாலும் லாஜிக்குடன் சிந்திப்பேன் என்பதால், தோல்வியடைய வாய்ப்புள்ளதை எண்ணி மனதளவில் தயாராகிவிட்டேன் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு அழுகை வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னை பொறுத்தவரை உலகக்கோப்பையை வெல்வது விதி என்று நினைக்கிறேன். அதேபோல் ரசிகர்கள் பலரும் எனக்கு கைதட்டி பாராட்டியது ஆச்சரியமாக இருந்தது.
பெரிதாக இந்திய அணியை ரசிகர்கள் விமர்சிக்கவில்லை. அதுவே ஆச்சரியமாக இருந்தது. ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் மிகச்சிறந்த மனிதர். இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, என்ன ரோல், அவரின் திறமை என்ன என்று அத்தனையும் அறிந்து திட்டமிடுவார். தூக்கத்தை தொலைத்துவிட்டு ஆலோசனையில் ஈடுபடுவார். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் எப்படி விளையாட போகிறோம் என்று தனது ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.
அட்டாக்கிங் கிரிக்கெட் என்று சொல்லாமல் அனைவருக்கும் புரிய வைத்தார். கேப்டன்சியை பொறுத்தவரை அவரின் கேப்டன்சியை தோனி, கங்குலி, கோலி உள்ளிட்டோருடன் ஒப்பிட தேவையில்லை. அவருக்கு என்று தனித்துவமான ஸ்டைலில் தான் கேப்டன்சியை மேற்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா குறித்த அஸ்வினின் பேச்சு ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.