சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகி உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும். அது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் பந்தயத்தில் இந்தியா நீடிக்க முடியும்.

இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங்கும் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மொத்தமாகவே 31 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இதனால் ரோகித் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று குரல்கள் வலுத்தன.இது குறித்து பயிற்சியாளர் கம்பீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கம்பீர், ரோகித் குறித்து சரியான பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமரை சந்திக்க சென்றபோது கூட கேப்டன் என்ற இடத்தில் ரோகித் சர்மா இல்லை.
இந்த சூழலில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா விலக முடிவெடுத்திருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் கில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத நிலையில் தற்போது அவர் அணிக்கு திரும்பிருக்கிறார்.
மேலும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்தில் விளையாடிய கேஎல் ராகுல் தற்போது தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். இதில் மூன்றாவது வீரராக விளையாட இருக்கிறார். அதேபோன்று ஏற்கனவே காயம் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆகாஷ் தீப் விலகிய நிலையில், பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன் விலகி இருப்பதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.