சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். எனினும் ரோஹித் சர்மா தான் இந்த முடிவை எடுத்ததாக பும்ரா விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் இதனை நம்பாத ரசிகர்கள் கம்பீர்தான் ரோகித் சர்மாவை அதிரடியாக நீக்கி இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரோஹித் சர்மா, இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தீர வேண்டும். தாம் சரியான ஃபார்மில் இல்லாததால் தான் நான் விலகினேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அப்போது ரோகித் சர்மா மறைமுகமாக கம்பீரை விமர்சித்து ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். அதாவது, சிட்னி டெஸ்ட் போட்டி பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவு இருந்தது. மேலும் முதல் நாள் அன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடுமையாக தடுமாறினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோஹித் சர்மா, நாம் எடுக்கும் சில விஷயங்கள் தவறாக போய் முடியலாம். இப்போது கூட சிட்னி டெஸ்டில் முதல் நாளில் நாங்கள் டாஸ் வென்ற பிறகு பந்து வீசி இருக்க வேண்டும்.
ஆனால் நாங்கள் தவறாக பேட்டிங்கை தேர்வு செய்து விட்டோம் என்று ரோகித் சர்மா குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் ரோகித் சர்மா கேப்டனாக இருந்திருந்தால் பந்துவீச்சை தான் நான் தேர்வு செய்திருப்பேன். ஆனால் கம்பீர் தவறான முடிவை எடுத்து விட்டார் என்று சொல்லாமல் கூறியிருக்கிறார்.ரோகித் சர்மாவின் இந்த கருத்து முற்றிலும் உண்மையானது.
ஏனென்றால் முதல்நாள் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், தற்போது பேட்டிங் செய்ய ஏற்றவகையில் ஆடுகளம் மாறி இருக்கிறது. இதற்கு காரணம் கடும் வெப்பம் சிட்னி நகரில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆடுகளம் தன்மை தற்போது மாறி இருக்கிறது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறான முடிவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.