சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்று விட முடியும். சிட்னி ஆடுகளம் இந்தியாவின் ஆட்ட திறனுக்கு ஏற்ற வகையில் இயல்பாக இருக்கும்.
ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வைத்து விடக்கூடாது என்பதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சிட்னி ஆடுகளத்தில் புற்களை அதிக அளவு வைத்திருக்கிறது. இதன் மூலம் பந்து அங்கு நன்றாக ஸ்விங் ஆகும்.

இதனால் இந்திய அணி பேட்ஸ்மேகள் தடுமாற வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் இந்திய அணியை தோற்கடித்து தொடரை வென்று விடலாம் என ஆஸ்திரேலியா நினைக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கவாஸ்கர், நான் பேசும்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூட கூறினார். தன் வாழ்நாளில் சிட்னி மைதானத்தில் இவ்வளவு புற்களை பார்த்ததில்லை என்று அவர் கூறினார்.
ஆனால் இதில் நீங்கள் என்ன கவனிக்க வேண்டும் என்றால், ஆடுகளத்தில் இவ்வளவு புற்கள் இருக்கிறது என்று எந்த ஒரு முன்னாள் இந்திய வீரர் ஆவது இது பற்றி குறை கூறினோமா? ஆனால் இந்தியாவில் உள்ள ஆடுகளம் மட்டும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தால் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பல முன்னாள் வீரர்களும் எங்கள் நாட்டில் அமைக்கப்படும் ஆடுகளத்தை மட்டும் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் நாங்கள் வெளிநாட்டுக்கு சென்று விளையாடும் போது எந்த ஆடுகளத்தை கொடுத்தாலும் அதில் விளையாடுகிறோம். எந்த ஒரு விமர்சனமும் செய்வதில்லை. வெளிநாடுகளில் என்ன சூழல் இருக்கோ அதற்கு ஏற்றார் போல் நாங்கள் மாறிக் கொள்கின்றோம். நானும் சிட்னி மைதானத்தில் விளையாடி இருக்கிறேன். போட்டியை பார்த்திருக்கிறேன்.
இந்த அளவுக்கு புற்கள் இருந்து நான் பார்த்ததில்லை. இந்த தொடரிலே அதிக அளவு புற்கள் ஆடுகளத்தில் இந்த மைதானத்தில் தான் விடப்பட்டிருக்கிறது. எனவே பேட்டிங் என்பது இங்கு கடினமாக இருக்கும். இதனால் தான் இந்திய அணி வீரர்கள் இன்று பேட்டிங் செய்ய தடுமாறி இருக்கிறார்கள். இந்த மைதானத்தில் மாடுகளை மேய விட்டால் கூட அது நன்றாக புற்களை சாப்பிட்டு விடும் .இந்த டெஸ்டில் பண்ட் அபாரமாக விளையாடியிருக்கிறார். தன்னுடைய உடலை பனையம் வைத்து பந்துகளை அவர் எதிர்கொண்டார்.இது போன்ற ஆடுகளத்தில் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.