மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த சூழலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா தனிப்பட்ட காரணத்திற்காக ஆஸ்திரேலியா செல்லாமல் மும்பையிலே தங்கிவிட்டார்.மேலும் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று பயிற்சியாளர் கம்பீரும் கூறி இருந்தார்.

இந்த சூழலில் ரோகித் சர்மா வரவில்லை என்றால் அவருக்கு பதில் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்றும் பயிற்சியாளர் கம்பீர் அறிவித்திருந்தார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவதற்கு இது சிறந்த ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பும்ராவிடம் நல்ல கிரிக்கெட் அறிவு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவர் ஒரு நல்ல தலைவராகவும் இருக்கின்றார்.பயிற்சியாளர் கம்பீரே ஊடகங்களுக்கு முன் பும்ராவின் தலைமை குணத்தை பாராட்டி பேசி இருந்தார். பும்ரா ஒரு வித்தியாசமான கேப்டனாக விளங்குவார். ஆஸ்திரேலியா அணியில் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கம்மின்ஸ், உலகக்கோப்பை ஆசஸ் தொடர் என அனைத்தையும் வென்று கொடுத்திருக்கிறார். பவுலராகவும் கம்மின்ஸ் சிறப்பாக செயல்பட்டார்.
என்னைப் பொருத்தவரையில் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டால் கம்மின்ஸ் போலவே அவரும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.இது பும்ராவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டனாக நன்றாக செயல்பட்டார் என்றால் அவரை டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவித்து விடுங்கள் என்று ரெய்னா கூறியுள்ளார். பும்ரா ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.