சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பிடித்த ஒரு அபார கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும்.
அது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் பந்தயத்தில் இருக்க முடியும். இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 185 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது.

இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழ்ந்தனர். இதனால் அந்த அணி தடுமாறியது. இந்த சூழலில் தான் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு ஸ்கேனுக்கு சென்று இருக்கிறார்.
இதனால் நிதிஷ்குமார் பந்து வீசும் சூழலுக்கு தள்ளப்பட்டார். இந்த தருணத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். கடந்த மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு கம்மின்ஸ் இன்னிங்ஸ் தான் மிகவும் முக்கிய காரணமாக இருந்தது.
இதனால் இம்முறை பேட் கம்மின்ஸ் ஆட்டமிழக்க வேண்டிய சூழலில் இந்தியா இருந்தது. ஆனால் பும்ரா இல்லாததால் அது நிச்சயம் நடக்காது என்று நினைப்பில் இந்திய ரசிகர்கள் இருந்தனர். ஆனால் நிதிஷ்குமார் ரெட்டி வீசிய பந்தை பேட் கம்மின்ஸ் அடிக்க முற்பட்ட போது அந்த பந்து நேராக விக்கெட் கீப்பர் மற்றும் கோலிக்கு நடுவே சென்றது.
எனினும் கண்ணிமைக்கும் நேரத்தில் கோலி தனது இடது பக்கம் தாவி அபாரமான கேட்சை பிடித்தார். இந்த கேட்ச் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் கம்மின்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதேபோன்று ஸ்டார்க் விளையாடிய போது கே.எல். ராகுல் அபாரமான ஒரு கேட்சை பிடித்தார். இதேபோன்று வெப்ஸ்டர் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தபோது 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வாலின் அபார கேட்சால் ஆட்டம் இழந்தார். இந்திய அணியின் கேட்ச் இன்று அபாரமாக இருந்ததால் இது ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கிறது.