மும்பை: 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 127 ரன்கள் அடித்ததன் மூலம் ஸ்மிருதி மந்தனாவின் 8 ஆண்டு கால பிரம்மாண்டமான சாதனையை முறியடித்திருக்கிறார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். மகளிர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகரமான சேஸிங்-களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை செய்து இருக்கிறார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்ற போட்டியில், ஸ்மிருதி மந்தனா 106 ரன்கள் எடுத்து இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
மேலும், வெற்றி, தோல்வியை தாண்டி ஒரு சேஸிங்கின் போது எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற ஸ்மிருதி மந்தனாவின் சாதனையையும் முறியடித்து இருக்கிறார் ஜெமிமா. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் 127 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் மூலம், ஸ்மிருதி மந்தனாவின் 125 ரன்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தார்.
மந்தனா கடந்த மாதம் உலகக் கோப்பைக்கு முன்னதாக டெல்லியில் நடந்த 3 போட்டிகள் கொண்ட இருதரப்புத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேஸிங்கில் 125 ரன்கள் அடித்து இந்த சாதனையை செய்து இருந்தார். எனினும், அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

ஒருநாள் போட்டியில் சேஸிங் செய்து வெற்றி பெற்ற போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்தவர் என்ற சாதனையும் மந்தனாவிடமே இருந்தது. 2017 உலகக் கோப்பையின் போது டான்டனில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அவர் அடித்த 106* ரன்களே அந்தச் சாதனையாகும். உலகிலேயே சிறந்த அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, தனது சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய போட்டியில் 127 ரன்கள் குவித்து மந்தனாவின் அந்தச் சாதனையையும் ஜெமிமா முறியடித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது டி20: மெல்போர்ன் போட்டியையும் குறி வைக்கும் மழை.. வானிலை அறிக்கை
மகளிர் உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் ஒரு இந்திய வீராங்கனை சதம் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, 2017 அரையிறுதியில் அதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் அடித்த 171* ரன்களே முந்தைய சாதனையாக இருந்தது. மேலும், உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் இலக்கை வெற்றிகரமாகத் துரத்திச் சென்று சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் ஜெமிமா பெற்றுள்ளார்.