ஹைதராபாத்: இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக 297 ரன்கள் குவித்து இமாலய வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் சமீப கால அதிரடி ஆட்டத்துக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் காரணம் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். ஆனால், உண்மையில் இதற்கான விதையை போட்டது கேப்டன் ரோஹித் சர்மா தான் என்ற உண்மையை உடைத்து இருக்கிறார் சஞ்சு சாம்சன்.
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் கடந்து 111 ரன்கள் குவித்து இருந்தார். இந்தியா 297 ரன்கள் குவித்ததோடு 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்தது.

இந்தப் போட்டிக்கு பின் பேசிய சஞ்சு சாம்சன், "2022 ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைதொடருக்கு பின் இந்திய அணி அதிரடியாக ஆட வேண்டும் என்ற முடிவை கேப்டன் ரோஹித் எடுத்தார். அவர் முன் நின்று அதை செய்தார். சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேனாக அதை செய்தார். தற்போது சூர்யகுமார் - கம்பீர் கூட்டணி அதை வழிநடத்தி செல்கிறது" என்றார்.
இதன் மூலம் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்துக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மட்டுமே காரணம் என்பதாக சில ரசிகர்கள் கூறி வருவது தவறு என்பது தெளிவாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறிய போது கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி இனி அதிரடியாக ஆட வேண்டும், குறிப்பாக டி20 போட்டிகளில் துவக்கம் முதல் 20 வது ஓவர் வரை ஒரே மாதிரியாக அதிரடி ஆட்டம் ஆட வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்து இருந்தார்.
அதற்கு ஏற்ற வகையில் இளம் வீரர்கள் பலரும் டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது இருந்து ரோஹித் சர்மாவின் ஆட்டம் முற்றிலுமாக மாறியது. அவர் டி20 அணியில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடும் பாணியை துவக்கினார். கேப்டன் வழியை இளம் வீரர்கள் அனைவரும் பின்பற்றத் தொடங்கினர். 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் ரோஹித் தனது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இறுதிப் போட்டி வரை அணியை அழைத்து சென்றார்.
IND vs BAN: இது நியாயமே இல்லை.. தமிழக பவுலரை ஏமாற்றிய சூர்யகுமார்.. 3 போட்டியிலும் அலைக்கழிப்பு
அதைத் தொடர்ந்த இந்திய அணி, 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன் பின்னரே இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரும் இந்திய அணி அதிரடியாக ஆட வேண்டும் என்ற திட்டத்தை முன் மொழிந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் ரோஹித் சர்மா போட்ட விதை இன்று கம்பீர் வரவுக்கு பின் முழு வடிவத்தை பெற்று இருக்கிறது. அந்த திட்டத்தை செயல்படுத்தும் சரியான நபராக கவுதம் கம்பீர் அமைந்து இருக்கிறார். அனைத்தும் சரியாக அமைந்ததால் இந்திய அணி உலகின் சிறந்த அதிரடி டி20 அணியாக உருமாறி வருகிறது.