மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டோ அல்லது டெக்னிக்கலாகவோ சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது என்று தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் விமர்சித்துள்ளார். இருந்தாலும் அவர் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது ஆச்சரியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் விளாசியிருக்கிறார். இந்திய அணிக்காக 59 டெஸ்ட் போட்டிகள், 265 ஒருநாள் போட்டிகள் மற்றும் 159 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2007ஆம் ஆண்டே இந்திய அணிக்காக அறிமுகமாகினாலும், 2013ஆம் ஆண்டுக்கு பின் தான் இந்திய அணியில் நிரந்தர இடத்தை ரோஹித் சர்மா பிடித்தார்.

அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று 10 ஆண்டுகளில் 5 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளார். இதன் காரணமாகவே இந்திய அணியின் கேப்டன்சி விராட் கோலிக்கு பின் நேரடியாக ரோஹித் சர்மாவின் கைகளுக்கு சென்றது. அவரும் இந்திய அணியை டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற வைத்து புதிய வரலாறு படைத்தார்.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து மும்பை அணிக்காக ஜான்டி ரோட்ஸ் பணியாற்றியுள்ளார். அதுகுறித்து ஜான்டி ரோட்ஸ் பேசுகையில், ரோஹித் சர்மா இப்போது வரையும் மாறவில்லை என்றே நினைக்கிறேன். அது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. மும்பை அணியுடன் இணைந்து பணியாற்றிய போது, ரோஹித் சர்மா சில த்ரோ-டவுன்களை மட்டுமே எதிர்கொள்வார்.
சில நேரங்களில் ஷேடோ பேட்டிங்கை செய்து பார்ப்பார். சச்சின் டெண்டுல்கரை போல் எந்தவொரு தீவிரமான பயிற்சியையும் ரோஹித் சர்மா செய்து பார்த்ததே கிடையாது. அதேபோல் ரோஹித் சர்மா டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேனும் கிடையாது. ஏனென்றால் எராளமான முறை கால்களை நகர்த்தாமல் விட்டதால், ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
ஆனால் ரோஹித் சர்மாவின் கைகளும், அவரின் ஜாலியான குணாதிசியமும் அவரை காப்பாற்றி வருகிறது. இத்தனை ஆண்டுகளாக ரோஹித் சர்மா மாறாமல் இருப்பதே ஆச்சரியம் தான் என்று கூறியுள்ளார். ஜான்டி ரோட்ஸின் கருத்து கிட்டத்தட்ட உண்மை என்றே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விராட் கோலியை போல் ரோஹித் சர்மா ஒருநாளும் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட மாட்டார்.
இதனை விராட் கோலியே பலமுறை கூறியிருக்கிறார். ரோஹித் சர்மாவை போல் ஒரு கிஃப்டட் கிரிக்கெட் வீரர் இந்திய அணியில் இருக்க முடியாது என்று கூறியுள்ளார். அதேபோல் ஃபிட்னஸ் ரீதியாகவும் ரோஹித் சர்மா இந்திய அணியின் விராட் கோலி, கேஎல் ராகுல் ஜடேஜா, பும்ரா அருகில் கூட வர முடியாது. இருந்தாலும் சேவாக்கை போல் எந்தவித பயமும் இல்லாமல் பொறுப்பை உணர்ந்து ரோஹித் சர்மா பேட்டிங் செய்து வருகிறார்.
அதேபோல் மனளதவில் ரோஹித் சர்மா ஒவ்வொரு தொடருக்கும் தயாராகி வருவதையும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால் எந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு சென்றாலு, ரோஹித் சர்மா அங்கு சிறப்பாக செயல்படுவதற்கான வழிகளை டெக்னிக்கலாக அல்லாமல் தேவையான விஷயங்களை மட்டும் அறிந்து செயல்படக் கூடியவர். அதுதான் அவருக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் கைகொடுத்தது குறிப்பிடத்தக்கது.