தரம்சாலா : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கவுதம் கம்பீரின் சாதனையை முறியடிக்க இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சான்ஸ் கிடைத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடக்கவுள்ளது. 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன் மூலமாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.

4வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய வீரர்களுக்கு ஒரு வாரம் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். அதேபோல் ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட வீரர்கள் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் உடன் ஆலோசனையில் உள்ளார்.
ஏனென்றால் தரம்சாலா மைதானத்தின் தட்பவெட்ப சூழல் இங்கிலாந்தின் வானிலையை ஒத்திருக்கும். இதனால் தரம்சாலா மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 4,034 ரன்களுடன் 17வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு முன் கவுதம் கம்பீர் 4,154 ரன்களுடன் 16வது இடத்தில் உள்ளார்.
இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 121 ரன்களை விளாசினால், கவுதம் கம்பீரின் சாதனையை முறியடிக்க முடியும். ஒருவேளை இந்த டெஸ்ட் போட்டியில் மிஸ் செய்தால், ரோகித் சர்மா 4 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஏனென்றால் அடுத்ததாக ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.