மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விலகி இருந்தார். ஆனால், அப்போது அவர் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் முடிவை எடுத்து இருந்ததாகவும், அதன் பின் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்று அந்த முடிவை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்காமல் போனதை அறிந்து கவுதம் கம்பீர் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விடுவார் என கவுதம் கம்பீர் நினைத்ததாகவும், அது நடக்காமல் போனதால் தான் அவர் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரோஹித் சர்மா சரியாக விளையாடவில்லை என்பதால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என ரசிகர்களும் கூறி வந்தனர். அந்த முடிவை அவர் எடுக்காமல் இருந்தாலும் அது குறித்து பயிற்சியாளர் அதிர்ச்சி அடைந்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி எனில் கவுதம் கம்பீர் மூத்த வீரர்களை ஓய்வு பெற வைக்க வேண்டிய அழுத்தம் கொடுக்கிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது.
இது பற்றி ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருப்பது இதுதான் - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இடையே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் சரியாக விளையாடாத ரோஹித் சர்மாவும் கடைசி போட்டிக்கு முன்பு ஓய்வை அறிவித்து விலகும் முடிவில் இருந்ததாக முதலில் இந்திய அணி நிர்வாகத்திற்கு கூறப்பட்டு இருக்கிறது.
ஆனால், ரோஹித் சர்மாவின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு கூறி உள்ளனர். இதை அடுத்து ரோஹித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தாமாக விலகியதாகவும், இது ஓய்வு இல்லை என்றும் அறிவித்தார். அதை கவுதம் கம்பீர் விரும்பவில்லை.
மேலும், இந்த தொடரில் துவக்கத்திலிருந்தே கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்துள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் பங்கேற்காத ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வந்த போது பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ய முடியாது என கம்பீர் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங் ஆர்டரை மாற்றி துவக்க வீரராக ஆடியதை கவுதம் கம்பீர் விரும்பவில்லை. மேலும், மூன்றாவது வேகப் பந்துவீச்சாளரை தேர்வு செய்வதிலும், அணியின் பவுலிங் வியூகத்தை வகுப்பதிலும் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா தனது தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் மோசமடைந்ததை அடுத்து ஓய்வை அறிவிக்கும் முடிவை எடுத்து, பின்னர் அதில் இருந்து பின் வாங்கி இருக்கிறார்.
44 வருட ரெக்கார்டுக்கு வேட்டு வைக்கப் போகும் ரோஹித் - கம்பீர்.. தலையில் துண்டை போட்ட ரசிகர்கள்
ரோஹித் சர்மாவின் ஓய்வை கவுதம் கம்பீர் விரும்புகிறார் என்பது ஒருபுறம் இருக்க, இந்த கருத்து வேறுபாடுகள் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வெளிப்படுமா? அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அஸ்வினை ஒய்வு பெற வைத்ததும் கம்பீர் தானா? கம்பீர் இதற்காகத்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.