IND vs ENG : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 600 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் கூட நாங்கள் வெற்றிகரமாக துரத்துவோம் என்று பேசிய இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனின் கருத்துக்கு தற்போது ரசிகர்கள் கடும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் அந்த அணி ரசிகர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் கொம்பு முளைத்தது போல் இந்தியாவை ஏளனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 399 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 292 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆட்டத்தின் மூன்றாவது நாளின் போது தான் இந்தியா 600 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தாலும் நாங்கள் அதனை அடிப்போம் என்று மெக்குல்லம் தங்களிடம் பேசியதாகவும் அதை நாங்கள் நம்புவதாகவும் ஆண்டர்சன் கூறியிருந்தார்.
மேலும் எங்களுடைய பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தை பார்த்து இந்தியா கொஞ்சம் பயந்து இருப்பதால், எந்த இலக்கை நிர்ணயிப்பது என்று தடுமாறும் என்றும் ஆண்டர்சன் கூறியிருந்தார். ஆண்டர்சனின் இந்த வீடியோ இன்று வைரலானது.இந்த நிலையில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. இதற்கு தற்போது இந்திய அணி ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
வெற்றி பெறுவதற்கு முன்பே ஓவர் பேச்சை இங்கிலாந்து அணி பேசியதற்கு தற்போது தக்க பாடத்தை இந்திய வீரர்கள் கொடுத்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பேஸ் பால் என்று திட்டம் எப்போதும் கை கொடுக்காது என்றும் அதற்கு இன்றைய ஆட்டமே சாட்சி என்றும் இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஓவர் தலை கனத்துடன் இங்கிலாந்து அணி வீரர்கள் இருந்ததே இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவியதற்கு காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
நம்பிக்கையுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு இந்திய பவுலர்களை கோபப்படுத்தும் முயற்சியில் இங்கிலாந்து ஈடுபட்டு தற்போது தங்களது தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக் கொண்டதாகவும் ரசிகர்கள் சாடியுள்ளனர். இதே போன்று திமீர் த்தனமாக இங்கிலாந்து வீரர்கள் இருந்தால் அடுத்தவரும் போட்டிகளிலும் தோல்வியை தழுவவே வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.