லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் SENA நாடுகளில் வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் ஒருவர் செய்த மாபெரும் சாதனையை சமன் செய்வார். 2 விக்கெட் வீழ்த்தினால் அதை முறியடிப்பார்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளையும் 'SENA' (South Africa, England, New Zealand, Australia) நாடுகள் என கிரிக்கெட் வட்டாரத்தில் அழைத்து வருகிறார்கள். இந்த நான்கு நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது ஆசிய நாடுகளுக்கு சவாலான ஒன்றாகவே உள்ளது. பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் என இரு தரப்புக்கும் இந்த நான்கு நாடுகளில் சிறப்பாக செயல்படுவது மிகப்பெரிய கெளரவமாக இருக்கிறது.

இந்த நிலையில், இந்த நான்கு நாடுகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பவுலர் என்ற சாதனையை பும்ரா சமன் செய்ய இருக்கிறார். இதற்கு முன்பாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம், SENA நாடுகளில் சேர்த்து 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 146 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். தற்போது பும்ரா இந்த நான்கு நாடுகளிலும் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 145 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினாலும் வாசிம் அக்ரமின் சாதனையை சமன் செய்வார். இரண்டு விக்கெட் வீழ்த்தினால் அவரது சாதனையை முறியடிப்பார். மேலும், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்த நான்கு நாடுகளிலும் 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற வியக்கத்தக்க சாதனையை செய்வார். எனவே, பும்ரா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடியிருக்கிறார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவாலான ஒன்று. முன்னதாக பும்ரா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் தன்னால் விளையாட முடியாது என இந்திய அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.
எனவே, அவர் மூன்று போட்டிகளில் மட்டும்தான் விளையாடுவார். முதல் போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அதன் பின் இந்திய அணியின் வெற்றி தோல்வியைப் பொறுத்து அவர் சில போட்டிகளில் ஓய்வு பெறுவார். பும்ராவுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் முகமது சிராஜ் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரைத் தவிர்த்து அர்ஷ்தீப் சிங், அர்ஷத் கான், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இங்கிலாந்து மண்ணில் இதற்கு முன் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை என்பதால் இந்த டெஸ்ட் தொடர் நிச்சயம் இந்திய அணிக்கு சவாலனாதாகவே அமையும். எனவே, இந்திய அணி பேட்ஸ்மேன்களை சார்ந்தே போட்டிகளை அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இங்கிலாந்து அணியிலும் அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லை. அந்த அணியின் மூத்த வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். அவருக்கு அடுத்து கிறிஸ் வோக்ஸ் மட்டுமே அந்த அணியின் அனுபவ பந்துவீச்சாளராக இருக்கிறார். மற்ற முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் காயத்தில் சிக்கி இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.