மும்பை: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 6வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியையும், இந்திய அணியையும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
ஹாராரேவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய ஜூனியர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

சச்சின் தனது பதிவில், "சாம்பியன்கள்! இந்த இளம் படையை நினைத்துப் பெருமை கொள்கிறேன். அவர்கள் விளையாடிய விதம் பயமில்லாமல் இருந்தது. பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் உட்பட ஒட்டுமொத்த அணிக்கும் எனது பாராட்டுகள். இந்தத் தருணத்தை நன்றாகக் கொண்டாடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆட்டநாயகன் வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டும் விதமாக, "உங்கள் அணியில் ஒரு 'சூர்யவன்ஷி' இருக்கும்போது, அது காலம் கடந்தும் பேசப்படும் ஒரு 'பிளாக்பஸ்டர்' (மாபெரும் வெற்றி) படமாகத்தான் இருக்கும். கலக்கிவிட்டாய் வைபவ்!" என்று சச்சின் பதிவிட்டுள்ளார். (சூர்யவன்ஷி என்பது ஒரு பிரபலமான இந்தி திரைப்படத்தின் பெயர் என்பதால், அதை ஒப்பிட்டு சச்சின் இவ்வாறு சிலாகித்தள்ளார்).
14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, இறுதிப்போட்டியில் ஆடிய ஆட்டம் உலக அரங்கில் இந்தியத் தலைநிமிரச் செய்துள்ளது. வெறும் 80 பந்துகளில் அவர் 175 ரன்கள் குவித்தார். இதில் 15 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். இது ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றிலேயே ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன் ஆகும்.
அவர் அடித்த 175 ரன்களில் 150 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலமாகவே வந்தவை. இவரது அதிரடியால் இந்திய அணி 50 ஓவர்களில் 411 ரன்கள் குவித்தது.
412 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 311 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியின் காலேப் ஃபால்கோனர் 115 ரன்கள் எடுத்துப் போராடினாலும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
விராட் கோலி, முகமது கைஃப், ரோகித் சர்மா போன்றவர்கள் ஜூனியர் உலகக்கோப்பை மூலமே வெளிச்சத்திற்கு வந்தார்கள். அந்த வரிசையில் ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்த அணியும் இந்திய கிரிக்கெட்டின் வருங்கால வீரர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் டெண்டுல்கரின் இந்தப் பாராட்டு இளம் வீரர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.