ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய இளம் இந்திய வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சர்பராஸ் கான் இருவரையும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே சிறப்பாக அமைந்தது.

அனுபவ வீரர் அஸ்வின் இல்லாமலேயே இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கட்டுப்படுத்தி அசத்தியது. அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதமும், சர்பராஸ் கானின் அரைசதமும் இங்கிலாந்து அணி வீரர்களின் நம்பிக்கையை மொத்தமாக வீழ்த்தியது என்றே கூற முடியும்.
பேஸ்பால் ஆடி வரும் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி ஜெய்ஸ்-பால் மூலம் பதிலடி கொடுத்ததாக பாராட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அறிமுக போட்டியிலேயே சர்பராஸ் கான் இரு இன்னிங்ஸ்களில் அரைசதம் விளாசி அசத்தினார். இதன் மூலமாக அறிமுக போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த நிலையில் ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் இருவரின் ஆட்டத்தையும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், டபுள் செஞ்சுரி.. டபுள் அரைசதம்.. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் கூட்டணி இணைந்து இங்கிலாந்து அணிக்கு டபுள் டிரபுளை உருவாக்கியது.

அவர்களின் ஆட்டத்தை நேரலையில் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்களின் ஆட்டம் குறித்து கேட்ட போது மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து இதுபோல் விளையாடுங்கள் என்று பாராட்டியுள்ளார். மும்பையை சேர்ந்த இரு வீரர்களும் இணைந்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளனர். அவர்களில் மும்பையின் சீனியரான சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.