மும்பை: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்திய அணிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இளம் வீரர்கள் திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் குணமடைந்து வருவதால், அவர்கள் உலகக்கோப்பை அணியில் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட திலக் வர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார்.
தற்போது திலக் வர்மா முழு உடல் தகுதியை எட்டிவிட்டதாகத் தெரிகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் அவர் பங்கேற்று விளையாடியுள்ளார். பிசிசிஐ மருத்துவக் குழு விரைவில் அவருக்கு முழு உடற்தகுதி சான்றிதழ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி மும்பையில் இந்திய அணியுடன் அவர் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு முக்கியமான ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் காயத்திலிருந்து வேகமாகத் தேறி வருகிறார். விலா எலும்பில் ஏற்பட்ட லேசான முறிவு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார். தற்போது அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பந்துவீச்சுப் பயிற்சியையும் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
இந்திய அணியில் உள்ள ஒரே ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே. குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக இருந்தாலும், பவர் பிளே ஓவர்களில் பந்துவீசுவதற்கு வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு மிக அவசியமானவர். எனவே, அவர் முழுமையாகக் குணமடையச் சிறிது காலம் எடுத்தாலும், அவரை அணியில் தக்கவைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடிந்ததும், இந்திய அணி மும்பை செல்கிறது. அங்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி அமெரிக்காவுக்கு எதிரான போட்டியுடன் இந்தியா தனது உலகக்கோப்பைப் பயணத்தைத் தொடங்குகிறது.
வாஷிங்டன் சுந்தர் ஒருவேளை முதல் போட்டியில் விளையாடாவிட்டாலும், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டிக்குள் அவர் முழுமையாகத் தயாராகிவிடுவார் என்று அணி நிர்வாகம் நம்புகிறது. நாக்-அவுட் சுற்றுகள் மற்றும் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் சுந்தரின் பங்கு முக்கியமானது.