திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், உள்ளூர் வீரரான சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற்றிருந்தும், விக்கெட் கீப்பராகச் செயல்படாதது ரசிகர்களிடையே முக்கிய கேள்வியை எழுப்பியது. அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் பணியைச் செய்தார். இது சஞ்சு சாம்சனை அணியிலிருந்து ஓரங்கட்டும் முயற்சியா என்று விவாதங்கள் எழுந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதற்குத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், "சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்யாதது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்திருந்தோம். திலக் வர்மா அணியில் இல்லாததால், இரண்டு விக்கெட் கீப்பர்களையும் அணியில் சேர்க்க முடிவு செய்தோம்.
அதன்படி, முதல் மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என்றும், கடைசி இரண்டு போட்டிகளில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என்றும் தீர்மானித்திருந்தோம். நான்காவது போட்டியில் இஷான் கிஷன் காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் ஐந்தாவது போட்டியில் அவர் திட்டமிட்டபடி விக்கெட் கீப்பிங் செய்தார்" என்று விளக்கமளித்துள்ளார்.

சஞ்சு சாம்சனுக்குத் தொடர் முழுவதும் வாய்ப்பு வழங்கப்பட்டும், அவர் மொத்தமாக 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரது சராசரி ஒற்றை இலக்கத்தில் (9.20) உள்ளது. மறுபுறம், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட இஷான் கிஷன், 215 ரன்கள் குவித்துத் தொடரில் முத்திரை பதித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 230-க்கு மேல் உள்ளது.
பேட்டிங்கில் இஷான் கிஷன் அசத்தினாலும், விக்கெட் கீப்பிங்கில் சில கேட்சுகளைத் தவறவிட்டது பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்குச் சற்றுச் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், உலகக்கோப்பையின் முதல் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக இஷான் கிஷன் தான் விக்கெட் கீப்பராகக் களமிறங்குவார் என்பதற்கான முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பைக்கு முன்னதாகக் காயமடைந்த வீரர்கள் குறித்தும் சூர்யகுமார் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். "திலக் வர்மா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர் மும்பையில் பிப்ரவரி 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பார். அவர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்தையும் செய்யத் தொடங்கிவிட்டார். வாஷிங்டன் சுந்தரும் குணமடைந்து வருகிறார். அவரும் விரைவில் முழு உடற்தகுதியுடன் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கிறோம்."என்றார் சூர்யகுமார்.
இந்தத் தொடரின் முடிவுகள் மற்றும் கேப்டனின் விளக்கத்தை வைத்துப் பார்க்கும்போது, உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், 2026 டி20 உலகக்கோப்பை தொடங்கும் முன்பே திலக் வர்மா இந்திய அணியில் இணைவார் என கூறப்படுகிறது. அவர் பிளேயிங் லெவனில் இடம் பெற்றால் இஷான் கிஷன் - சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவரை மட்டுமே பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய முடியும்.
அதன் அடிப்படையில் பார்த்தால் நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு பெற்ற இஷான் கிஷன் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு தன் ஃபார்மை நிரூபித்து இருக்கிறார். மறுபுறம் சஞ்சு சாம்சன் தான் களமிறங்கிய ஐந்து போட்டிகளிலும் சொற்ப ரன்களே எடுத்து ஏமாற்றம் அளித்து இருக்கிறார். எனவே, இஷான் கிஷனுக்கு தான் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.