திருவனந்தபுரம்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டியில், உள்ளூர் நட்சத்திரம் சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்துள்ளார். உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாகத் த தன்னை நிரூபிக்கக் கிடைத்த கடைசி வாய்ப்பையும் அவர் நழுவ விட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன், தனது சொந்த ஊர் ரசிகர்களுக்கு முன்னிலையில் அதிரடியாக விளையாடுவார் என்று மைதானம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆட்டத்தின் துவக்கத்தில் ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கையளித்தார்.
ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சஞ்சு சாம்சன் தூக்கி அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டுத் திசைமாறியது. பின்திசையில் நின்றிருந்த பெவன் ஜேக்கப்ஸ் லாவகமாக கேட்ச் பிடித்தார்.

வெறும் 6 பந்துகளை மட்டுமே சந்தித்த சஞ்சு சாம்சன், 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த கணம், ஆரவாரமாக இருந்த மைதானமே நிசப்தத்தில் ஆழ்ந்தது.
பிப்ரவரி 7ஆம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. அதற்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். ஏற்கனவே கடந்த 15 இன்னிங்ஸ்களில் சஞ்சு சாம்சன் போதிய ரன்கள் குவிக்காமல் திணறி வருகிறார். இந்தத் தொடரில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டும், அவர் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சொந்த ஊரிலும் அவர் சொதப்பியிருப்பது, உலகக்கோப்பை அணியில் அவருக்கான இடத்தை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது. மாற்று விக்கெட் கீப்பராகக் கருதப்படும் இஷான் கிஷன் போட்டியில் இருப்பதால், சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு இஷான் கிஷன் களமிறங்கினார். அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து இருந்தது.