லாகூர்: பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது, டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு மறைமுக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் வெற்றிக்குப் பிறகு அவர் பேசிய வார்த்தைகள் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுளன.
லாகூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய அப்ரார் அகமது, 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில், "உலகக்கோப்பைத் தொடரிலும் உங்களின் பிரத்யேக கொண்டாட்டத்தைத் தொடருவீர்களா?" என்று அப்ரார் அகமதுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நிச்சயமாக, எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் தொடர்ந்து செய்வேன். குறிப்பாகச் சில அணிகளுக்கு எதிராக நான் கண்டிப்பாக இப்படித்தான் கொண்டாடுவேன்" என்று கூறினார். அவர் குறிப்பிட்ட அந்த "சில அணிகள்" என்பது இந்தியாவைத்தான் குறிக்கிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
அப்ரார் அகமது விக்கெட் எடுத்தவுடன், பேட்ஸ்மேனை பார்த்துத் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து, "வெளியே போ" என்பது போலச் சைகை செய்வார். இது பல முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபியில் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தியபோது அப்ரார் அகமது இதேபோல் சைகை செய்தார். 2025 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தபோதும் இதே பாணியில் கொண்டாடினார்.
இது பேட்ஸ்மேனை அவமதிக்கும் செயல் என்று விமர்சிக்கப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய வீரர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் பின்னர் அப்ரார் அகமதுவைப் போலவே செய்து அவரைக் கிண்டல் செய்திருந்தனர். தற்போது உலகக்கோப்பையிலும் இதைத் தொடருவேன் என்று அப்ரார் கூறியிருப்பது போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
லாகூர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 168 ரன்கள் எடுத்தது. சைம் அயூப் 40 ரன்களும், கேப்டன் சல்மான் அலி ஆகா 39 ரன்களும் எடுத்தனர். இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் 146 ரன்களில் சுருண்டது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.