திருவனந்தபுரம்: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் தனது விக்கெட் வேட்டையால் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆரம்பத்தில் ரன்களை வாரி வழங்கிய அவர், கடைசி கட்டத்தில் யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதை அடுத்து இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
272 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் அதிரடி துவக்கம் அளித்தார். குறிப்பாக அர்ஷ்தீப் சிங்கின் ஓவர்களை அவர் குறிவைத்துத் தாக்கினார். அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரில் 17 ரன்களும், மூன்றாவது ஓவரில் 23 ரன்களும் விளாசப்பட்டன.
தனது முதல் 2 ஓவர்களிலேயே அர்ஷ்தீப் சிங் 40 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஒரே ஒரு விக்கெட்டை (டிம் சீஃபர்ட்) மட்டுமே எடுத்திருந்தார். இதனால் இந்திய அணிக்குச் சற்று பதற்றம் ஏற்பட்டது.

ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அர்ஷ்தீப் சிங் தனது உண்மையான திறமையை நிரூபித்தார். 12வது ஓவர் மற்றும் 16வது ஓவர்களை அவர் வீசினார். இந்த ஓவர்களில் அவர் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். ரச்சின் ரவீந்திரா (30) மற்றும் மிட்செல் சான்ட்னர் (0) ஆகியோரை வீழ்த்தினார்.
பின்னர் ஆபத்தான வீரர் டேரில் மிட்செல் (26), கைல் ஜேமிசன் (9) மற்றும் இஷ் சோதி (33) ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசிலாந்து அணியைச் சுருட்டினார்.
தனது கடைசி 2 ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தமாக 4 ஓவர்கள் வீசி 51 ரன்களை விட்டுக்கொடுத்தாலும், முக்கிய 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகப் பதிவானது. ஆரம்பத்தில் ஏற்பட்ட சறுக்கலைத் தாண்டி, மன உறுதியுடன் பந்துவீசி அர்ஷ்தீப் சிங் சாதித்துக் காட்டிய விதம் ரசிகர்களைக் கவர்ந்தது.
இறுதியில் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷான் கிஷன் (103), சூர்யகுமார் யாதவ் (63) மற்றும் ஹர்திக் பாண்டியா (42) ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.