திருவனந்தபுரம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை எட்டுவதற்கு ஒரு வீரர் எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் இந்தச் சாதனை கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் வெறும் 1822 பந்துகளில் 3000 ரன்களைக் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரக வீரர் முஹம்மது வாசிம் 1947 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. அதனை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். மேலும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் (2068 பந்துகள்), ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் (2077 பந்துகள்) மற்றும் டேவிட் வார்னர் (2113 பந்துகள்) ஆகிய ஜாம்பவான்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்திய அளவில் ஒப்பிடும்போது, ரோஹித் சர்மா 2149 பந்துகளிலும், விராட் கோலி 2169 பந்துகளிலும் 3000 ரன்களைக் கடந்திருந்தனர். இவர்கள் இருவரையும் விட மிகக் குறைந்த பந்துகளில் சூர்யகுமார் யாதவ் இந்தச் சாதனையை எட்டியுள்ளது அவரது அதிரடி ஆட்டத்திற்குச் சான்றாக உள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, அபிஷேக் சர்மா (30) மற்றும் சஞ்சு சாம்சன் (6) ஆகியோர் ஆட்டமிழந்தனர். 48 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உடன் இணைந்து ருத்ரதாண்டவம் ஆடினார்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த சூர்யகுமார், 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் இஷான் கிஷன் வானவேடிக்கை காட்டினார். அவர் 43 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார்.