மும்பை: 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ளது. 2024ஆம் ஆண்டு இந்திய அணிக்குக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, 2026 உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்குத் துருப்புச்சீட்டாகச் செயல்படப்போகும் வீரர் யார் என்பது குறித்துத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் 26 வயது இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் மிக முக்கிய பங்காற்றுவார் என்று ரோஹித் சர்மா கணித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங் குறித்துப் புகழ்ந்து பேசினார். "அர்ஷ்தீப் சிங்கின் மிகப்பெரிய பலமே புதிய பந்தை ஸ்விங் செய்வதுதான். அவரால் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. புதிய பந்திலும் சரி, ஆட்டத்தின் கடைசி நேரத்திலும் சரி, அவரால் சிறப்பாகப் பந்துவீச முடிகிறது. இந்த இரண்டு தருணங்களும் டி20 போட்டியில் மிக முக்கியமானவை. அதில் அர்ஷ்தீப் சிங் வல்லவராக இருக்கிறார்" என்று ரோஹித் கூறினார்.
மேலும், "ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் அணியில் இருப்பது மிகப்பெரிய சாதகமாகும். ஏனெனில் இவர்கள் இருவரும் எப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்தவே முயற்சிப்பார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.
அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு முறை குறித்துப் பேசிய ரோஹித், "புதிய பந்தில் அவர் வீசும்போது, இடதுகை பேட்ஸ்மேன்களை ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுக்க வைக்கிறார். அதேபோல் வலதுகை பேட்ஸ்மேன்களின் கால்களைக் குறிவைத்துத் தாக்குகிறார். தற்போது வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராகப் பந்தை வெளிப்புறமாகத் திருப்பவும் அவர் கற்றுக்கொண்டுள்ளார். இது ஒரு புதிய பந்து வீச்சாளருக்கு மிக முக்கியமான தகுதியாகும்" என்று விளக்கினார்.
கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் செயல்பட்ட விதத்தை ரோஹித் சர்மா நினைவு கூர்ந்தார். "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அர்ஷ்தீப் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த குயின்டன் டி காக் விக்கெட்டை அவர் வீழ்த்தியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதேபோல் ஆட்டத்தின் 19வது ஓவரை வீசிய அவர், வெறும் 2 அல்லது 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதுதான் அவருடைய இயல்பு" என்று பாராட்டினார்.
இதேபோல சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்தும் ரோஹித் தனது கருத்தைப் பதிவு செய்தார். குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரையும் ஒரே அணியில் விளையாட வைப்பது சிறந்தது என்று அவர் கூறினார்.
"கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு இது ஒரு சவாலாக இருக்கலாம். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைச் சேர்த்தால், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாட வேண்டியிருக்கும். ஆனால், என்னைக் கேட்டால் குல்தீப் மற்றும் வருண் ஆகிய இருவரையும் அணியில் சேர்ப்பேன். ஏனெனில் எதிரணி பேட்ஸ்மேன்களால் இவர்களைக் கணித்து ஆடுவது மிகக் கடினம். இவர்கள் விக்கெட் வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்கள்" என்று ரோஹித் சர்மா ஆலோசனை வழங்கியுள்ளார்.