திருவனந்தபுரம்: இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. போட்டி முடிந்த பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், இந்திய அணியின் பேட்டிங் வலிமை குறித்தும், மைதானத்தின் அளவு குறித்தும் புலம்பினார்.
இந்த தொடரின் நான்கு போட்டிகளில் இந்திய அணி பேட்டிங்கில் அதிரடியை காட்டியது. அதன் உச்சமாக ஐந்தாவது போட்டியில் 271 ரன்கள் குவித்தது இந்திய அணி. அதைத் துரத்திய நியூசிலாந்து அணி போராடி 225 ரன்கள் குவித்தது. ஆனாலும், வெற்றி பெற முடியவில்லை.இதை அடுத்து தான் நியூசிலாந்து கேப்டன் பவுண்டரி எல்லைக் கோட்டை பற்றி பேசினார்.

இந்திய அணியின் இமாலய ஸ்கோர் மற்றும் தொடர் தோல்வி குறித்துப் பேசிய மிட்செல் சான்ட்னர், "இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடும்போது அவர்களை வீழ்த்துவது மிகக் கடினம் என்பதைத் தொடரின் ஆரம்பத்திலேயே நான் கூறினேன். அது இப்போதும் நிரூபணமாகி உள்ளது.
எங்கள் பந்துவீச்சாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், மைதானத்தின் எல்லைக்கோட்டை இன்னும் கொஞ்சம் பின்னால் தள்ளி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினார். இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்த சிக்ஸர்கள் மைதானத்தைத் தாண்டிச் சென்றதைக் குறிக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை என்றாலும், இந்தத் தொடர் முழுவதுமே ஒரு விறுவிறுப்பான கிரிக்கெட்டாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியிலும் எங்களுக்குப் புதிய சவால்கள் இருந்தன. பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என இரு தரப்பினரும் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். இதுபோன்ற நெருக்கடியான சூழலில் விளையாடுவது உலகக்கோப்பைத் தொடருக்குச் செல்லும் எங்களுக்குச் சிறந்த பாடமாக அமையும்" என்றார்.
பந்துவீச்சு குறித்துக் கவலை தெரிவித்த சான்ட்னர், "எதிரணியினர் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாகவே விளாசும்போது அவர்களைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. ஆடுகளங்கள் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும்போது 230 ரன்கள் அடித்தால் கூடப் போதாது என்ற நிலை உள்ளது. பெரிய ஓவர்களைக் கட்டுப்படுத்தி, ஓவருக்கு 15 அல்லது 16 ரன்களுக்குள் மட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே நாங்கள் கற்றுக்கொண்ட பாடம்" என்று கூறினார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 271 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மிட்செல் சான்ட்னர் (60 ரன்கள்), கைல் ஜேமிசன் (59 ரன்கள்), ஜேக்கப் டஃபி (53 ரன்கள்) என அனைவரும் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் நியூசிலாந்து அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.