தரம்சாலா: உலகக்கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது. நியூசிலாந்து அணியின் தோல்விக்கு பின், வடிவேலுவை நியூசிலாந்து அணியாக உருவகப்படுத்தி மீம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "என்னனே இப்படி இந்தியா கிட்ட தோத்து போய்ட்டீங்களே.." என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு, "டேய் இவங்கள எங்க அடிக்கணும்னு எனக்கு தெரியும்டா" என்று பதில் அளிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் எந்த ஐசிசி தொடர்களிலும் நியூசிலாந்து அணியை இந்திய அணி வென்றதே கிடையாது. 20 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்திய அணி வென்றுள்ளது. இதனை மெர்சல் படத்தில் வரும் விஜய் 2007ல் இருந்து, "எங்கள் கைகள் ஒருநாள் ஓங்கும்" என்று சொல்வது போலவும், இறுதியாக 2023ல் வென்ற பின், மெஜிசியன் விஜய், "நீ விதைத்த வினையெல்லாம்" என்று சொல்லி வீழ்த்தியது போலவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல் ரகம்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி நட்சத்திர வீரர் முகமது ஷமி 10 ஓவர்களில் 54 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதனை ஜெயிலர் படத்தின் இடைவேளை காட்சியில் மனைவி மற்றும் மகள் இருவரும் எழுந்து நிற்க, ரஜினி கெத்தாக உட்காரும் காட்சியை வைத்து ஷமிக்கு உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஃபீல்டிங் செய்யும் வீரர்களுக்கு பயிற்சியாளர் திலீப் ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் பதக்கம் வழங்கி வருகிறார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜா, கேஎல் ராகுல் மற்றும் பும்ரா உள்ளிட்ட மூன்று வீரர்கள் கேட்சை தவறவிட்டனர். இதனால் கோபமடைந்த பயிற்சியாளர் திலீப், "இன்னைக்கு ஒரு பயலுக்கும் மெடல் கிடையாது" என்று சொல்வது போல் வடிவேலுவை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதையடுத்து புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன், "நான் இங்க ஆள்றதுக்கு வந்துருக்கேன்" என்று சொல்லும் வசனத்தை சுப்மன் கில் சொல்வதாகவும், அவருக்கு பின் அர்ஜூன் டெண்டுல்கர் இருப்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.