IND vs NZ: இந்தியாவுக்கு எதிராக 4 வீரர்கள் மட்டுமே செய்த சாதனையை செய்த நியூசிலாந்து வீரர் ஆலன்
திருவனந்தபுரம்: ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 272 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு, துவக்க வீரர் ஃபின் ஆலன் அதிரடி துவக்கம் அளித்தார். இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்த அவர், பவர் பிளே ஓவர்களில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
பவர் பிளேயில் அரைசதம்
பொதுவாக டி20 போட்டிகளில் முதல் 6 ஓவர்கள் பவர் பிளே என்று அழைக்கப்படும். இந்த ஓவர்களில் ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முயற்சிப்பார்கள். ஆனால் இந்திய அணிக்கு எதிராக பவர் பிளே ஓவர்களுக்குள்ளேயே அரைசதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல.

ஆனால், ஃபின் ஆலன் அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஆட்டத்தின் முதல் 6 ஓவர்களுக்குள் அவர் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக பவர் பிளே ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் குவித்த நான்காவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்திய அணிக்கு எதிராக பவர் பிளேயில் அதிக ரன்கள் அடித்தவர்கள்:
ஃபின் ஆலன் (நியூசிலாந்து) - 57 ரன்கள் (2026 - திருவனந்தபுரம்)
லிட்டன் தாஸ் (வங்கதேசம்) - 56 ரன்கள் (2022 - அடிலெய்டு)
கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா) - 52 ரன்கள் (2022 - ஹைதராபாத்)
ஜான்சன் சார்லஸ் (மேற்கிந்திய தீவுகள்) - 51 ரன்கள் (2016 - லாடர்ஹில்)
அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு காலி
ஃபின் ஆலன் களத்தில் இருந்தவரை இந்திய பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். குறிப்பாக அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவர்களைக் குறிவைத்துத் தாக்கிய அவர், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை விரட்டினார். அர்ஷ்தீப் சிங் 2 ஓவர்களிலேயே 40 ரன்களை வாரி வழங்கினார். அதன் பின்னர் அவர் விக்கெட் வீழ்த்தினாலும் ஆலன் அவரது முதல் இரண்டு ஓவர்களை துவம்சம் செய்தார்.
80 ரன்களில் ஆட்டமிழப்பு
வெறும் 38 பந்துகளை மட்டுமே சந்தித்த ஃபின் ஆலன், 8 பவுண்டரிகள் மற்றும் 6 இமால சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்து அக்ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் பிடித்த அபாரமான கேட்ச் மூலம் அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஃபின் ஆலன் மற்றும் கிளென் பிலிப்ஸ் (7 ரன்கள்) ஆகியோர் அக்சர் படேல் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி ஆட்டத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அதன் பின் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களை அள்ளி அசத்தினார். நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடினாலும் விக்கெட்களை இழந்ததால் தோல்வி அடைந்தது. முன்னதாக இந்திய அணி தரப்பில் இஷான் கிஷன் 103 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 63 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications