திருவனந்தபுரம்: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் செய்யாத ஒரு புதிய உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 103 ரன்கள் மற்றும் சூர்யகுமார் யாதவ் 61 ரன்கள் குவித்தனர். அவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்த இமாலய ஸ்கோர் எட்டப்பட்டது.

இந்த ஸ்கோரின் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் நான்கு முறை 250 ரன்களுக்கும் மேல் குவித்த உலகின் முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணி 3 முறை 250+ ரன்களைக் குவித்துச் சாதனையைத் தக்க வைத்திருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து, செக் குடியரசு, மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் தலா 2 முறை 250+ ரன்களைக் கடந்துள்ளன.
297/6 - எதிர் வங்கதேசம் (ஹைதராபாத், 2024)
283/1 - எதிர் தென்னாப்பிரிக்கா (ஜோகன்னஸ்பர்க், 2024)
271/5 - எதிர் நியூசிலாந்து (திருவனந்தபுரம், 2026)
260/5 - எதிர் இலங்கை (இந்தூர், 2017)
நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி ஆக்லாந்தில் 245 ரன்கள் குவித்ததே நியூசிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்தச் சாதனையும் தற்போது இந்திய அணியால் முறியடிக்கப்பட்டுள்ளது.
272 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு, ஃபின் ஆலன் 38 பந்துகளில் 80 ரன்கள் குவித்து மிரட்டினார். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால் அந்த அணி 19.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சதம் அடித்த இஷான் கிஷன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.