திருவனந்தபுரம்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில், விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, சஞ்சு சாம்சன் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது, அவரது இடத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவும், அதேசமயம் யதார்த்தத்தை உணர்த்தும் வகையிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் குறித்துப் பேசிய இர்ஃபான் பதான், "தனிப்பட்ட முறையில் சஞ்சு சாம்சன் நிறைய ரன்கள் குவிக்க வேண்டும் என்றும், நீண்ட காலம் இந்திய அணியில் நீடிக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். ஏனெனில், கடந்த காலங்களில் அவருக்கு அநியாயம் இழைக்கப்பட்டது உண்மைதான்.
சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவரைத் துவக்க இடத்திலிருந்து மாற்றி நடுவரிசையில் களமிறக்கினார்கள். அது நியாயமற்ற செயல். ஆனால் இப்போது அவருக்குத் துவக்க வீரராக ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று கூறினார்.

அதேவேளையில், சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பினால் மாற்று ஏற்பாடுகள் நடக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். "தற்போது அவருக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஒருவேளை சஞ்சு சாம்சன் ரன் குவிக்கத் தவறினால், அணி நிர்வாகம் அவருக்குப் பதிலாக இஷான் கிஷனைத் தேர்வு செய்யும். அந்த முடிவை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ரன் அடிக்காதபோது மாற்றங்கள் செய்வது இயல்பானதே" என்று பதான் தெளிவாகக் கூறினார்.
நடப்புத் தொடரில் சஞ்சு சாம்சன் முறையே 10, 6, 0 மற்றும் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மறுபுறம் இஷான் கிஷன் சிறப்பான ஃபார்மில் உள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு வரும் திலக் வர்மா குறித்தும் இர்ஃபான் பதான் முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார். "இந்திய அணி தற்போது அதிரடியாக விளையாடி வருகிறது. இது சிறந்தது தான். ஆனால், ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறும்போது அல்லது பந்து நின்று திரும்பும்போது, நிலைமைக்கு ஏற்ப நிதானமாக ஆடக்கூடிய திலக் வர்மா போன்ற வீரர்கள் அணிக்கு மிக அவசியம்.
அணியில் அனைவரும் அடித்து ஆடுகிறார்கள். ஆனால் நெருக்கடியான நேரத்தில் அணியைத் தாங்கிப்பிடிக்கும் திறன் திலக் வர்மாவிடம் உள்ளது. எனவே அவர் அணிக்கு முக்கியம்" என்று பதான் தெரிவித்தார்.