திருவனந்தபுரம்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் சஞ்சு சாம்சனைப் பார்த்து ஜாலியாகக் கமெண்ட் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் கடைசிப் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது சொந்த ஊருக்கு வருவதால், விமான நிலையத்தில் அவருக்குத் தனி வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சஞ்சு சாம்சனை சூழ்ந்து கொண்டபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவ், "தயவுசெய்து வழிவிடுங்கள்.. சேட்டாவை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்" என்று சத்தமாகக் கூறினார்.

மலையாளத்தில் 'சேட்டா' என்றால் அண்ணன் என்று அர்த்தம். கேப்டன் சூர்யகுமார் யாதவ் இப்படிக் கூறியதைக் கேட்டுச் சஞ்சு சாம்சன் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அணி வீரர்கள் இப்படி ஜாலியாக இருந்தாலும், சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. இந்தத் தொடரில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டும், கடந்த 4 போட்டிகளில் அவர் மொத்தம் 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 15 போட்டிகளில் சொற்ப ஒரு அரைசதம் மட்டுமே அடித்து இருக்கிறார்.
சொந்த மண்ணில் நடைபெறும் இந்தப் போட்டியிலாவது அவர் ஜொலிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், அணியின் நலன் கருதி அவரை நீக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இது குறித்துப் பேசியுள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், கடைசிப் போட்டியில் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு இஷான் கிஷனைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "நான் மட்டும் இந்திய அணியின் நிர்வாகத்தில் இருந்திருந்தால், கடைசிப் போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதில் இஷான் கிஷனைத்தான் தேர்வு செய்வேன். இஷான் கிஷன் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
உலகக்கோப்பையில் இஷான் கிஷன் தான் விக்கெட் கீப்பராகச் செயல்படப் போகிறார் என்றால், அவருக்குப் போதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். அது சஞ்சு சாம்சனின் சொந்த ஊராகவே இருந்தாலும், உலகக்கோப்பைக்கான பயிற்சியே முக்கியம். எனவே கடைசிப் போட்டியில் இஷான் கிஷனைத் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் களமிறக்குவதே சரியான முடிவாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காயத்திலிருந்து குணமடைந்து வரும் திலக் வர்மா உலகக்கோப்பைக்கு முன் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்தால் அணியில் இடம் கிடைப்பது இன்னும் கடினமாகிவிடும். எனவே, இப்போதே ஒரு நிலையான விக்கெட் கீப்பரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே பார்த்திவ் படேலின் வாதமாக உள்ளது. சொந்த மண்ணில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது இஷான் கிஷன் களமிறங்குவாரா என்பது நாளை தெரியும்.