திருவனந்தபுரம்: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 43 பந்துகளில் 103 ரன்கள் விளாசிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தப் போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. போட்டிக்குப் பின் ஆட்டநாயகன் விருதை வென்ற இஷான் கிஷன் தனது ஆட்டம் மற்றும் உலகக்கோப்பைத் திட்டம் குறித்து மனம் திறந்து பேசினார்.
சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய இஷான் கிஷன், முதல் பந்திலிருந்தே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 103 ரன்கள் குவித்தார். இது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தனது இன்னிங்ஸ் குறித்துப் பேசிய இஷான் கிஷன், "ஆரம்பத்தில் ஆடுகளத்தில் பந்து சற்றுத் தடுமாறியது. ஆனால் மறுமுனையில் அபிஷேக் சர்மா ஆடிய விதம் எனக்குப் பெரும் உதவியாக இருந்தது. அவர் வெளிப்படுத்திய வேகத்தைப் பார்த்த பிறகு, அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொண்டேன். பந்தை மட்டும் கவனித்து அதற்கேற்ப ஷாட்களை ஆடினேன். அந்தத் திட்டம் எனக்குக் கைகொடுத்தது" என்று கூறினார்.
சதத்தை நெருங்கியபோது என்ன நினைத்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் முதிர்ச்சியான பதிலை அளித்தார். "தனிப்பட்ட சாதனைகளைப் பற்றி நாங்கள் இப்போது கவலைப்படுவதில்லை. இதுதான் அணியின் தற்போதைய மனநிலை. சதத்தை நெருங்கிவிட்டோம் என்பதற்காக, மெதுவாக ஆடி ஒரு ரன் எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
அப்படிச் செய்தால் பெரிய ஷாட் அடிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். பந்து அடிப்பதற்கு வசதியாக இருந்தால், விக்கெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் அடிக்க வேண்டும். அணியின் வெற்றி தான் முக்கியமே தவிர, தனிப்பட்ட மைல்கல் அல்ல" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
உலகக்கோப்பைத் தொடர் குறித்துப் பேசிய அவர், "நான் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தாலும், இன்னும் முழுத் திருப்தி அடையவில்லை. எனது முழுக் கவனமும் உலகக்கோப்பைத் தொடர் மீதுதான் உள்ளது. அங்குதான் இன்னும் கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது. இந்தச் சிறந்த ஃபார்மை உலகக்கோப்பைத் தொடருக்கும் கொண்டு சென்று, அணிக்குப் பங்களிப்பதே மிக முக்கியம்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.
இந்தப் போட்டியில் இஷான் கிஷன் (103), சூர்யகுமார் யாதவ் (63) மற்றும் ஹர்திக் பாண்டியா (42) ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி 271 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.