தரம்சாலா: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றதற்கு விராட் கோலியின் பேட்டிங்கை விடவும் நட்சத்திர பவுலர் முகமது ஷமியின் பவுலிங் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் 75 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 274 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 95 ரன்களை விளாசினார். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் 20 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து அணியை உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வீழ்த்தி சாதித்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு விராட் கோலியை விடவும், இந்த உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக களமிறங்கிய முகமது ஷமியே முக்கிய காரணமாக இருக்கிறார். ஏனென்றால் புதிய பந்தில் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவரான ஷமி, நேற்றைய ஆட்டத்தில் 9வது ஓவர் வீசுவதற்கு தான் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே வில் யங்கை வீழ்த்தி அசத்தினார் ஷமி.
அதன்பின் ரச்சின் - மிட்செல் இருவரின் அபாரமான பார்ட்னர்ஷிப்பால் நியூசிலாந்து அணி மீண்டது. 75 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி கொண்டிருந்த ரச்சின் ரவீந்திராவையும் வீழ்த்தி அசத்தினார் ஷமி. அதன்மூலம் இந்திய பவுலர்கள் அனைவரும் கம்பேக் கொடுக்க முடிந்தது. இருப்பினும் டேரில் மிட்செல்லின் அபாரமான ஆட்டத்தால் 44 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி சுமார் 250 ரன்களை நெருங்கிவிட்டது.

இதனால் கடைசி 6 ஓவர்களில் பேட்டை சுழற்றினால் நியூசிலாந்து அணியால் எளிதாக 300 ரன்களை எட்ட முடியும் என்ற நிலை உருவாகியது. அதுமட்டுமல்லாமல் டேரில் மிட்செல் ஒரு முனையில் நின்று ரன்களை சேர்த்து கொண்டே இருந்தார். சேப்மேன் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களை வீழ்த்தியிருந்தாலும், கடைசி நேரத்தில் சான்ட்னர் மற்றும் ஹென்ரி உள்ளிட்ட வீரர்கள் கூட அபாயகரமானவர்கள் தான்.
அப்போது 48வது ஓவரில் அடுத்தடுத்து பந்துகளில் இருவரையும் வீழ்த்தியதோடு, கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளில் டேரில் மிட்செல் மற்றும் ஃபெர்குசன் ரன் அவுட்டாகவும் காரணமாக அமைந்தார். இதன் மூலமாக நியூசிலாந்து அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதோடு, கடைசி நேரத்தில் ஷமி வீழ்த்திய விக்கெட்டுகள் இந்திய அணிக்கான இலக்கு குறையவும் காரணமாக அமைந்தது.