புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். முதலில் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இந்திய மண்ணில் ஒரு போட்டியில் 10 ரன்களை கூட எடுக்காத கேப்டன்கள் பட்டியலில் 11வதாக இடம் பிடித்து இருக்கிறார்.
சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் இந்த மோசமான சாதனையை செய்த இந்திய கேப்டன் என்ற பெயரையும் பெற்று இருக்கிறார். கடந்த மாதம் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 ரன்களும், இரண்டாவது இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்களும் எடுத்தார் ரோஹித் சர்மா. அதன் மூலம் அந்த போட்டியில் 11 ரன்கள் எடுத்து இந்த மோசமான சாதனை பட்டியலில் இடம் பெறுவதில் இருந்து 2 ரன் வித்தியாசத்தில் தப்பினார்.

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 9 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி இருந்தார் ரோஹித். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 16 பந்துகளை சந்தித்து 8 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இந்த டெஸ்ட் போட்டியில் அவர் மொத்தமே 8 ரன்கள் மட்டும் எடுத்து இருக்கிறார்.
இதற்கு முன் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 ரன்கள் கூட எடுக்காத நிகழ்வு பத்து முறை நடந்து இருந்தது. தற்போது 11 வது முறையாக ரோஹித் சர்மா அந்த மோசமான சாதனையை செய்து இருக்கிறார். இதற்கு முன் அனில் கும்ப்ளே 2008 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகியும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்களில் ஆட்டம் இழந்தும் இருந்தார்.
அந்தப் போட்டியில் அனில் கும்ப்ளே மொத்தமாக 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பின் எந்த இந்திய கேப்டனும் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் 10 ரன்கள் கூட எடுக்காமல் இருந்ததில்லை. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ரோஹித் சர்மா அந்த மோசமான நிகழ்வை செய்திருக்கிறார்.
IND vs NZ: 23 ஆண்டுகள் எந்த அணியாலும் செய்ய முடியாததை செய்த நியூசிலாந்து.. இந்தியாவுக்கு சிக்கல்
ரோஹித் சர்மா ஃபார்ம் இழந்துவிட்டார் என்று விமர்சனம் எழுந்து வரும் நிலையில் இந்த மோசமான சாதனையையும் அவர் செய்து இருக்கிறார். இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய நிலையில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும், டெஸ்ட் தொடரை 2 - 0 என நியூசிலாந்து அணி கைப்பற்றியது.