திருவனந்தபுரம்: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது கேப்டன்சி பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாகப் பொறுப்பேற்றது முதல், இதுவரை ஒரு டி20 தொடரை கூட இழக்காத கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு டி20 அணியின் லகானை கையில் எடுத்த சூர்யகுமார் யாதவ், இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி இதுவரை விளையாடிய அனைத்து இருதரப்புத் தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் தொடர் வெற்றி.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது (டிரா).
இலங்கை அணியை 3-0 என வீழ்த்தி தொடர் வெற்றி.
வங்கதேச அணியை 3-0 என வீழ்த்தி தொடர் வெற்றி.
தென்னாப்பிரிக்கா மண்ணில் 3-1 எனத் தொடரை வென்றது.
இங்கிலாந்து அணியை 4-1 என வீழ்த்தியது.
ஆசியக் கோப்பையை வென்று சாதித்தது.
மீண்டும் ஆஸ்திரேலியாவை 2-1 என வீழ்த்தியது.
தென்னாப்பிரிக்காவை 3-1 என வீழ்த்தியது.
தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் இமால வெற்றி.
மேற்கண்ட பட்டியலைப் பார்க்கும் போது, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி இதுவரை ஒரு டி20 தொடரைக் கூட இழந்ததில்லை என்பது தெளிவாகிறது. தென்னாப்பிரிக்காவுடனான ஒரு தொடர் மட்டுமே சமநிலையில் முடிந்தது. மற்ற அனைத்துத் தொடர்களிலும் இந்திய அணி வெற்றியே பெற்றுள்ளது. பேட்டிங்கில் எப்படி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை விரட்டுகிறாரோ, அதேபோல் கேப்டன்சியிலும் எதிரணிகளைத் திணறடித்து வருகிறார்.
இந்த வெற்றிப் பயணம், வரவிருக்கும் 2026 டி20 உலகக்கோப்பை தொடர் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள இந்தத் தொடரில், நடப்பு சாம்பியனான இந்திய அணி கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது.
இஷான் கிஷன், சிவம் துபே, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களைக் கொண்ட படையை சூர்யகுமார் யாதவ் சிறப்பாகக் கையாண்டு வருகிறார். இதே உத்வேகத்துடன் உலகக்கோப்பையையும் வென்று கொடுத்தால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த டி20 கேப்டன்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் உயர்வார் என்பதில் சந்தேகமில்லை. அவரது 'கோல்டன்' கேப்டன்சி பயணம் உலகக்கோப்பையிலும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.