சென்னை: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் சேஸிங் செய்து வென்றிருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்த உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 5லும் வென்றுள்ளதால், கிட்டத்தட்ட இந்திய அணி அரையிறுதி சுற்றில் ஒரு காலை வைத்ததாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இருப்பதால், இந்திய அணி நிச்சயம் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்றே சொல்லலாம். இந்த 5 வெற்றிகளை பொறுத்தவரை இந்திய அணி அபார வெற்றியை பெற்றிருந்தாலும், அனைத்து வெற்றியுமே சேஸிங்கில் வந்துள்ளது.
இதற்கு இந்திய மைதானங்களும் முக்கியமான காரணம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே இந்திய அணி டாஸை இழந்தது. இதன்பின் நடைபெற்ற 4 போட்டிகளிலுமே இந்திய அணி டாஸ் வென்று நேரடியாக சேஸிங்கை தேர்வு செய்து வெற்றிபெற்றுள்ளது. அதிலும் விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மூவரும் இருக்கும் ஃபார்முக்கு எவ்வளவு பெரிய இலக்கையும் இந்திய அணியால் சேஸ் செய்ய முடியும்.
ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் டாப் ரன் ஸ்கோரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் முதல் இரு இடங்களில் இருக்கிறார்கள். அதேபோல் பனிப்பொழிவு வருவதால், பேட்டிங்கிற்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது. ஆனால் இதுவே இந்திய அணிக்கு பின்னடைவாகவும் அமையும் என்று பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்திய அணி முதல் பேட்டிங் செய்து இலக்கை எப்படி டிஃபெண்ட் செய்யும் என்பது இதுவரை தெரியவில்லை. இரண்டாவது பவுலிங் செய்தால், பனிப்பொழிவு இருக்கும் போது இந்திய அணி பவுலிங் அட்டாக் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும். இதனால் இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளுடன் முதல் பேட்டிங் செய்து பவுலிங் அட்டாக்கை சோதனை செய்ய வேண்டிய அவசியத்தில் இந்திய அணி உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் 5 பவுலர்களுடன் களமிறங்கிய போதே இந்திய அணியின் ஜடேஜாவால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. குல்தீப் யாதவை குறிவைத்து அட்டாக் செய்த போது, என்ன செய்வதென்று தெரியாமல் களத்தில் குழம்பி 114 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இந்திய பவுலிங் அட்டாக்கை அரையிறுதிக்கு செல்வதற்குள் சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.