மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜாவை ஃபீல்டிங்கில் பயன்படுத்திய விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்று உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சதம், குல்தீப் யாதவ் பவுலிங், முகமது ஷமியின் சாதனை விக்கெட்ஸ் என்று ஏராளமான காரணங்கள் உள்ளன.

ஆனால் இவற்றை கடந்து ரோகித் சர்மாவின் கேப்டன்சி மிகமுக்கியமான காரணமாக உள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக இந்திய அணி பவுலிங்கில் கொஞ்சம் திணறிய போது, ரோகித் சர்மா அவர்களை கையாண்ட விதமும், எந்தவித அவசரமும் இல்லாமல் ஆலோசித்து முடிவுகளை எடுத்ததும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஏனென்றால் மிட்செல் - வில்லியம்சன் கூட்டணி ரன்களை குவித்து கொண்டிருந்த போது ரோகித் சர்மாவுக்கு ஓய்வறையில் இருந்தும், சக வீரர்களிடம் இருந்தும் அறிவுரைகள் கொடுக்கப்பட்டு கொண்டே இருந்தன. ஆனால் எது தேவையோ அதனை மட்டும் ரோகித் சர்மா சரியாக செய்து கொண்டே இருந்தார். குறிப்பாக பதற்றமடைந்த இந்திய அணி வீரர்கள் ஃபீல்டிங்கில் கோட்டைவிட தொடங்கினார்கள்.
இதனை புரிந்து கொண்ட ரோகித் சர்மா, நியூசிலாந்து அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கான திட்டத்திற்கேற்ப ஜடேஜாவை ஃபீல்டிங் பொசிஷனை மாற்றிக் கொண்டே இருந்தார். கிளென் பிலிப்ஸ்-க்கு ஜடேஜா கேட்ச் பிடித்த இடம் லாங் ஆஃப். அதேபோல் மிட்செல் கொடுத்த கேட்சை ஜடேஜா பிடித்த இடம் டீப் மிட் விக்கெட். அதேபோல் சாப்மேனுக்கு ஸ்கொயர் லெக் திசையில் கேட்சை பிடித்து அசத்தினார் ஜடேஜா.
இதன் மூலமாக ரோகித் சர்மா எப்படி கேப்டன்சியை செய்துள்ளார் என்று தெரிந்து கொள்ள முடியும். சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, ரெய்னா மற்றும் மெக்கல்லம் இருவரையும் இப்படிதான் பயன்படுத்தி இருப்பார். அதேபோல் ரோகித் சர்மா ஜடேஜாவை பயன்படுத்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.